நியூயார்க்: இந்திய டி20 அணியில் இடம் பெற்ற சிவம் துபே தனக்கு அணியில் வாய்ப்பு கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை எந்த அளவுக்கு நோகடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு நோகடித்தார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரிங்கு சிங் இடத்தை தட்டிப் பறித்த சிவம் துபே ஆல் - ரவுண்டர் என்ற அடையாளத்துடன் பிளேயிங் லெவனிலும் இடம் பெற்றார். ஆனால், இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் அவர் பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிக்க வில்லை. அவருக்கு பந்து வீசும் வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அவர் வீசிய ஒரே ஓவரில் 14 ரன்களை விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து பேட்டிங்கிலும் சொதப்பினார். 111 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி சேஸிங் செய்த போது எட்டாவது ஓவரில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் களத்துக்கு வந்தார் சிவம் துபே.
களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து பேட்டிங் செய்தார் அவர். பல ஓவர்கள் கழித்தும் கூட ஒரு பந்தை கூட சரியாக அடிக்கவில்லை. அவர் ஷாட் அடிக்க வேண்டும் என நினைத்த எந்த பந்தும் பேட்டிலேயே சிக்கவில்லை. மேலும், ஒரு முறை அவர் கொடுத்த கேட்ச் ஒன்றை அமெரிக்க வீரர் தவறவிட்டார். இப்படி மிக மோசமாக ஆடிக் கொண்டிருந்தார் சிவம் துபே.
14வது ஓவர் வரை அவர் 24 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில் அவரது பேட்டில் எட்ஜ் ஆகி சென்ற ஒரு ஃபோர் மட்டுமே அவர் அடித்த ஒரே ஒரு பவுண்டரியாக இருந்தது. அவரது மோசமான பேட்டிநகை பார்த்து வெளியில் அமர்ந்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் நொந்து போன மனநிலையில் இருந்தது வெளிப்படையாக தெரிந்தது.
இந்த நிலையில் 15வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து தன்னம்பிக்கையை பெற்றார் சிவம் துபே. நல்ல வேளையாக அதற்கு அடுத்த ஓவரில் அமெரிக்காவுக்கு ஐந்து ரன்கள் பெனால்ட்டியும் வழங்கப்பட்டது. அதனால், அமெரிக்க வீரர்கள் துவண்டு போன நிலையில் இருந்தனர். அப்போது சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார்.
பின்னர் 18.2 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. சிவம் துபே 35 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இருந்தார். சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் ஒரு வேளை இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால் அதற்கு சியம் துபே தான் முக்கிய காரணமாக இருந்திருப்பார்.