மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ அதிகாரிகளின் பேச்சை மதிக்காமல் நடந்து கொண்டதாக கூறி ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டு இருந்தார். அவரது பிசிசிஐ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படும் முன்பே அவரது விருப்பத்தின் பேரில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உறுதியாக வாய்ப்பு அளிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரிகள் கூறி உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக ரன் குவிக்காததை அடுத்து அவரை அணியிலிருந்து நீக்கியது இந்திய அணி நிர்வாகம். அப்போது அவரை ரஞ்சி டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து நீண்ட ஓய்வுக்கு பின் அணிக்கு திரும்பி இருந்த அவருக்கு முதுகு வலி இருந்ததாக கூறப்பட்டது.
அதன் காரணமாக அவர் ரஞ்சி டிராபியில் சில போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், அவருக்கு முதுகு வலி இல்லை எனவும், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் தப்பிக்கவே முதுகு வலி இருப்பதாக பொய்யான தகவலை கூறுகிறார் எனவும் கருதிய பிசிசிஐ அவரது பிசிசிஐ ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இனி ஸ்ரேயாஸ் இந்திய அணியில் இடம் பிடிப்பது மிக கடினம் என அனைவரும் எண்ணினர். இதனிடையே 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டார். அந்த அணியும் ஐபிஎல் கோப்பை வென்றது. அந்த அணியின் ஆலோசகராக ஸ்ரேயாஸ் ஐயரை வழிநடத்தியது கவுதம் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். அவர் இன்று நேர்முகத் தேர்வில் பங்கேற்றார். அவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே அவரது அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரேயாஸ் ஐயரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பிசிசிஐ-யிடம் கவுதம் கம்பீரின் செல்வாக்கு என்ன என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்கள் கிரிக்கெட் வாழ்வின் கடைசி சில ஆண்டுகளில் உள்ளனர். அவர்கள் அடுத்து வரும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த தலைமுறை வீரர்களை தயார் செய்ய வேண்டிய முக்கியமான பணி பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீருக்கு உள்ளது. அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தன்னுடன் இணக்கமான உறவில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயரை வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக்கவும் வாய்ப்பு உள்ளது.