மும்பை : 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பெற்று இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வருங்கால இந்திய கேப்டனான சுப்மன் கில்லை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கூறி இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சில வாரங்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. அந்த இந்திய அணியில் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இடம்பெற்று இருந்தனர். விராட் கோலியும் துவக்க வீரராக இறங்கும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் மூன்று துவக்க வீரர்கள் அந்த 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அதனால் மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில்லுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவரை மாற்று வீரராக மட்டுமே பிசிசிஐ அறிவித்தது. அதாவது முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 15 வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே சுப்மன் கில் இந்திய அணியில் இடம் பெற முடியும்.
இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் அளிக்கப்படாதது குறித்து இயான் மார்கன் தனது கருத்தை முன்வைத்து இந்திய அணியை எச்சரித்து இருக்கிறார். இது பற்றி இயான் மார்கன் கூறுகையில், "என்னைக் கேட்டால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை விட நான் சுப்மன் கில்லை தான் அணியில் சேர்ப்பேன். நான் கில்லுடன் விளையாடி இருக்கிறேன். அவர் ஒரு போட்டிக்காக எப்படி தன்னை தயார் செய்து கொள்வார், அவரது சிந்தனை ஓட்டம் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவர் எதிர்கால இந்திய கேப்டன். இது போன்ற தலைமை பண்பு கொண்ட வீரர்களை எப்போதுமே அணியில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பெரிய போட்டிகளின் போது, அழுத்தமான சூழ்நிலைகளின் போது அணிக்கு கை கொடுப்பார்கள். அவர்களை பிளேயிங் லெவனில் ஆட வைக்காமல் வெளியே அமர வைத்தாலும் கூட அவர் அணியில் இடம் பெற்று இருப்பது மற்றவர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்" என்றார்.