லாடர்ஹில்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "டி" பிரிவில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.
முன்னதாக இலங்கை அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோத இருந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. போட்டி நேரத்திற்கு முன்பு இருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. மேலும், மழையால் ஒட்டுமொத்த மைதானமும் குளம் போல காட்சியளித்தது. அந்த பகுதியில் வெள்ள பாதிப்புக்கான எச்சரிக்கையும் விடப்பட்டது. மழை விடாமல் பெய்ததால் அம்பயர்கள் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதை அடுத்து இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நேபாள அணி இதுவரை இரண்டு போட்டிகளில் பங்கேற்று அதில் ஒரு புள்ளி மட்டும் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. மறுபுறம் இலங்கை அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு புள்ளி மட்டும் பெற்று மோசமான நெட் ரன் ரேட் (-0.777) உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
தற்போது இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் குரூப் டி பிரிவில் நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் மோதும் போட்டி மழையால் கைவிடப்பட வேண்டும். மேலும், இலங்கை அணி தனது கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியை மிகப்பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். இது இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இலங்கை அணியின் சூப்பர் 8 கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்க அணியை தவிர இலங்கை அணி தான் பலமான அணியாக இருந்தது. வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய மூன்று அணிகளையும் இலங்கை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கத்துக்குட்டி அணிகளிடம் இலங்கை தலைகுனிவை சந்தித்துள்ளது. இனி நெதர்லாந்து அணிக்கு எதிராக ஆறுதல் வெற்றியும் பெறவில்லை என்றால் அந்த அணி மோசமான நிலைக்கு சென்று விடும்.