மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீரை பிசிசிஐ நியமிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி எச்சரிக்கும் வகையில் சூசகமாக தன் கருத்தை கூறி இருக்கிறார்.
கவுதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இருப்பது வேறு, இந்திய அணி போன்ற முன்னணி தேசிய அணி ஒன்றுக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பது வேறு என சுட்டிக்காட்டி இருக்கிறார். அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் கங்குலி. அதில், "ஒரு பயிற்சியாளர் உடைய முக்கியத்துவம் என்னவென்றால் அவரது வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகளின் மூலம் ஒரு வீரரின் வாழ்க்கையை, எதிர்காலத்தை மாற்ற முடியும். களத்திலும், வெளியிலும் இதை செய்ய முடியும். எனவே, எந்த ஒரு நிர்வாகமும் அதன் பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்" என கம்பீர் மற்றும் பிசிசிஐ பெயர்களை குறிப்பிடாமல் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவின் மூலம் அவர் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சேப்பலை குறிப்பிடுவதாக சிலர் கூறினாலும், அவர் மறைமுகமாக கவுதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது சரியாக இருக்காது என்பதை சுட்டிக் காட்டவே இவ்வாறு கூறியிருக்கிறார் என பலரும் கருதினர்.
இந்த நிலையில் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கவுதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிப்பது குறித்து வெளிப்படையாக பேசினார் கங்குலி. அப்போது, "கம்பீர் ஆர்வமாக இருக்கிறார். நேர்மையானவராக இருக்கிறார். அவர் பயிற்சியாளர் பதவிக்கு ஒரு நல்ல தேர்வு தான். ஆனால், ஒரு ஐபிஎல் அணிக்கு ஆலோசகராக அல்லது பயிற்சியாளராக இருப்பதும், இந்திய அணி போன்ற உலகின் முன்னணி தேசிய அணி ஒன்றிற்கு பயிற்சியாளராக இருப்பதும் வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. நிச்சயம் இது கவுதம் கம்பீருக்கு தெரியும். அவர் இதை உணர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திரங்களை எப்படி கையாள்வது என்பது விரைவில் தெரியும். இந்திய அணியின் சூழ்நிலைக்கேற்ப அவர் தன்னை மாற்றிக் கொள்வார். உங்கள் சொந்த எண்ணங்களை திணிப்பது மட்டுமே பயிற்சியாளர் பணி அல்ல. இதை அவர் புரிந்து கொண்டு அணியை வழிநடத்துவார் என்று நம்புகிறேன்" என்றார் கங்குலி.