நியூயார்க் : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 21வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டி காக் - ஹென்ரிக்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வங்கதேசம் அணி தரப்பில் தன்சிம் ஷகிப் முதல் ஓவரை வீசினார்.

அந்த ஓவரின் 2வது பந்திலேயே டி காக் அபாரமாக ஒரு சிக்சரை விளாச, அடுத்த பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட்டது. முதல் 5 பந்துகளிலேயே 11 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி பந்தை எதிர்கொண்ட ஹென்ரிக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து 3வது ஓவரை வீச வந்த தன்சிம் ஷகிப் சிறப்பாக பவுலிங் செய்து டி காக்கை 18 ரன்களில் வீழ்த்தி அனுப்பி வைத்தார்.
பின்னர் வந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களிலும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய போதும் தென்னாப்பிரிக்கா அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் டேவிட் மில்லரின் அதிரடியான மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றிபெற்றது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி முதல் பேட்டிங் செய்வதால், வங்கதேசம் அணிக்கு 160 ரன்களையாவது நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நியூயார்க் பிட்சில் 140 ரன்கள் வரை எளிதாக சேஸ் செய்ய முடியும் என்பதால், தென்னாப்பிரிக்கா அணி சிக்கலில் சிக்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்த போட்டியில் வங்கதேசம் அணி வெற்றிபெறும் பட்சத்தில் எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். ஏனென்றால் ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி வென்றுள்ளது. இதனால் மீதமிருக்கும் இலங்கை, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.