நியூயார்க் : வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வங்கதேசம் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் டேவிட் மில்லர் - கிளாசன் கூட்டணி தென்னாப்பிரிக்கா அணியை மீட்டெடுத்தது. இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்தது.

இதன்பின் வங்கதேசம் அணிக்காக தன்சித் ஹசன் - ஷான்டோ கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ரபாடா வீசிய 2வது ஓவரில் தன்சித் ஹசன் 9 ரன்காளில் ஆட்டமிழக்க, பின்னர் ஷான்டோ- லிட்டன் தாஸ் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவர் பிளே ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 29 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், உடனடியாக ஸ்பின்னரை அட்டாக்கில் கொண்டு வந்தார் கேப்டம் மார்க்ரம். பின்னர் மஹாராஜ் வீசிய முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் 9 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் தேவையில்லாமல் நார்கியேவை அட்டாக் செய்ய முயன்று 3 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் கேப்டன் ஷான்டோவும் 14 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்கள் மட்டுமே சேர்த்து தடுமாறியது. தொடர்ந்து மஹ்மதுல்லா - ஹிர்டாய் கூட்டணி பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் இருவரும் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி விளாசியதோடு, ஓடி ஓடி ரன்களை சேர்க்க தொடங்கினர்.
இதனால் 15 ஓவர்களில் வங்கதேசம் அணி 83 ரன்களை எட்டியது. இதனால் வங்கதேசம் வெற்றிக்கு 30 பந்துகளில் 31 ரன்கள் தேவையாக இருந்தது. கிட்டத்தட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திலும் இப்படியோரு சூழலில் இருந்து தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. இதனால் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க தீவிரமாக போராடினர். அப்போது 18வது ஓவரின் முதல் பந்தில் ஹிர்டாய் 34 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரபாடா பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார்.இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வங்கதேசம் அணிக்கு ஏற்பட்டது.
பார்ட்மேன் வீசிய 19வது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரை வீச மஹாராஜ் வந்தார். இந்த ஓவரின் 3வது பந்தில் ஜேக்கர் அலி 8 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 5வது பந்தில் மஹ்மதுல்லா அடித்த பந்தை பவுண்டரி லைனில் தரமான கேட்சை மார்க்ரம் பிடித்தார். இதனால் கடைசி பந்தில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு வங்கதேசம் தள்ளப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்த, தென்னாப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலமாக குறைந்த ரன்களை டிஃபெண்ட் செய்த அணி என்ற இந்தியாவின் சாதனையை தென்னாப்பிரிக்கா முறியடித்தது.