நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு மிக மோசமான போட்டி அட்டவணை மற்றும் பயணத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், அதேசமயம் வேறு சில அணிகள் ஒரே மைதானத்தில் தங்கள் பயிற்சி போட்டி உட்பட நான்கு போட்டிகளில் விளையாடுவதாகவும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஸ் தீக்ஷனா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் வேறு அணி என குறிப்பிடுவது இந்திய அணியை தான்.
இந்திய அணி நியூயார்க் நகரின் நாசா கவுண்டி மைதானத்தில் தனது பயிற்சி போட்டி உட்பட குரூப் சுற்றின் முதல் மூன்று போட்டிகளையும் விளையாட உள்ளது. அதிலும் தொடர்ந்து மூன்று போட்டிகளும் அங்கேயே நடைபெற உள்ளது. அதனால் இந்திய அணி பயணம் செய்யத் தேவையில்லை. ஆனால், இலங்கை அணி தனது பயிற்சி போட்டியை ஒரு மைதானத்தில் ஆடிவிட்டு, அதன் பின் முதல் குரூப் சுற்றுப் போட்டிக்கு வேறொரு மைதானத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் அடுத்த மூன்று குரூப் போட்டிகளுக்கும் வெவ்வேறு மைதானங்களுக்கு பயணம் செய்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அது மட்டும் இன்றி விமான நிலையத்தில் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டி இருப்பதாகவும், அதனால் பயிற்சி செய்ய முடியவில்லை எனவும் அந்த அணியின் முன்னணி வீரர் தீக்ஷனா கூறி இருக்கிறார். இந்திய அணிக்கு மட்டும் சாதகமான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், எந்த பிட்ச்சில் ஆடுகிறோம், அதன் தன்மை என்ன என்பது தெரிந்து ஆடக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மற்ற அணிகளுக்கு அது போன்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இது குறித்து தீக்ஷனா பேசுகையில், "எங்களுக்கு நியாயமே இல்லாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் அந்த மைதானத்தை விட்டு உடனடியாக வேறு மைதானம் இருக்கும் நகரத்துக்கு பயணம் செய்ய வேண்டி உள்ளது. ஏனெனில், நாங்கள் நான்கு வெவ்வேறு மைதானங்களில் ஆட உள்ளோம். இது நியாயமே இல்லை. நாங்கள் ஃப்ளோரிடாவில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். அதன் பின் மியாமியில் இருந்து பயணம் செய்ய வேண்டும். நாங்கள் ஒவ்வொரு முறையும் விமானத்துக்காக எட்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. அதை நாங்கள் செய்கிறோம். நாங்கள் இரவு எட்டு மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தோம். ஆனால் காலை ஐந்து மணிக்கு தான் விமானம் கிடைத்தது. இது நியாயமே இல்லை. ஆனால் போட்டியில் ஆடுவதற்காக இதை நாங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்." என்றார்.
மேலும், "தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி முடிந்துள்ள நிலையில் அடுத்த விமானத்தை பிடிக்க போட்டி முடிந்த உடன் ஒரு மணி நேரம் 40 நிமிடத்தில் ஹோட்டல் அறையில் இருந்து கிளம்பி விமான நிலையம் செல்ல வேண்டும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பு கூட நாங்கள் விடியற்காலை 5 மணிக்கு எழுந்து மைதானத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்கள் பயணக் களைப்பின் காரணமாக பயிற்சியை கூட நாங்கள் ரத்து செய்தோம்" என்றார் தீக்ஷனா.
மேலும், "என்னால் சில அணிகளின் பெயரை சொல்ல முடியாது. அவர்கள் ஒரே மைதானத்தில் தங்கள் குரூப் சுற்று போட்டிகளை விளையாடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு அந்த மைதானத்தின் தன்மை என்ன என்பது தெரியும். அவர்கள் அதே மைதானத்தில் பயிற்சி போட்டியில் கூட விளையாடுகிறார்கள். வேறு யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. நாங்கள் எங்கள் பயிற்சி போட்டியை ஃப்ளோரிடாவில் விளையாடினோம். ஆனால் மீண்டும் மூன்றாவது போட்டியில் தான் ஃப்ளோரிடாவில் நாங்கள் விளையாட உள்ளோம். அதற்காக நாங்கள் மீண்டும் பயணம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டாவது இது போன்ற விஷயங்களை மற்றவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த ஆண்டு எதுவுமே மாறாது என்பது எனக்கு தெரியும். எங்கள் நிர்வாகம் இன்றைய விமானத்தை சரியாக திட்டமிட முயன்று வருகிறது. ஏனெனில் நாங்கள் இன்று போட்டி முடிந்த உடன் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு விமானத்தில் கிளம்ப வேண்டும்" இவ்வாறு தீக்ஷனா கூறினார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 77 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டிக்கு பின்பு தான் இலங்கை வீரர்கள் இவ்வாறு தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் இதை அவர்கள் கூறினார்கள். இதில் சோகம் என்னவென்றால் அப்போது அடுத்த விமானத்துக்கான நேரம் நெருங்கியதால் அந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர்கள் விரைவாக முடித்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.