நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் இந்திய அணி நிச்சயம் அடுத்த சுற்றான சூப்பர் 8-க்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இதுவரை அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி உள்ளது. அடுத்து அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளை நம்பியே பாகிஸ்தான் அணி உள்ளது.

பாகிஸ்தான் அணி இதுவரை அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வி அடைந்துள்ளது. கனடா அணிக்கு எதிராக நேற்று ஆடிய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அந்தப் போட்டியில் 107 ரன்கள் என்ற எளிய இலக்கை 18வது ஓவரில் தான் பாகிஸ்தான் அணி எட்டி இருந்தது. அதனால், அதிக நெட் ரன் ரேட் பெறும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான்.
அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது கடினம் தான். அதற்கு முக்கிய காரணம் குரூப் ஏ பிரிவில் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் உடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி மட்டும் பெற்று 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கனடா அணியும் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதில் கனடா அணி அடுத்து இந்தியாவுடன் விளையாட வேண்டும் என்பதால் அந்த அணி அதில் வென்று சூப்பர் 8 முன்னேறுவது கடினம். அதே சமயம், பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியை வீழ்த்தி 4 புள்ளிகள் பெற்றாலும் அமெரிக்காவை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். மேலும், அமெரிக்க அணி அடுத்து இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளை சந்திக்க உள்ளது. அதில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தாலும், அயர்லாந்து அணியை வீழ்த்தினால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு மிக எளிதாக முன்னேறிவிடும்.
தற்போது பாகிஸ்தான் அணி சூப்பர் 8-க்கு முன்னேற வேண்டுமானால் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் அமெரிக்காவை வீழ்த்தினால் மட்டுமே அது சாத்தியம். அதிலும் முக்கியமான ஒரு விஷயம் நடக்க வேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்கா மோதும் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தால் அதிக பந்துகள் மீதம் இருக்கும் வகையில் சேஸிங் செய்து முடிக்க வேண்டும்.
அப்படி செய்து இந்திய அணி வெற்றி பெற்றால் அமெரிக்க அணியின் நெட் ரன் ரேட் வெகுவாக பாதிக்கப்படும். அதன் மூலம் பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட்டை விட அமெரிக்க அணியின் நெட் ரன் ரேட் கீழே சரிய வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
அதே சமயம் அமெரிக்க அணி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைய வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் நடந்தால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை இந்திய அணி மோசமாக விளையாடி அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்து, பின்னர் அயர்லாந்தை வீழ்த்தினால் அப்போதே பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 கனவு முடிவுக்கு வந்துவிடும்.