மும்பை : இந்திய அணியின் துணை கேப்டன்சி தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகினர். அதன்பின் நேரடியாக ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக தான் களமிறங்கியுள்ளார்.

இதற்கு இடையில் நடைபெற்ற எந்த சர்வதேச டி20 தொடர்களிலும் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. இதனால் 6 மாதத்திற்கு பின் இந்திய அணிக்காக களமிறங்கவுள்ள வீரருக்கு துணை கேப்டன் பதவி வழங்கியது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன்சி தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அஜித் அகர்கர், துணை கேப்டன் பதவி குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இந்திய அணியின் அனைத்து வீரர்களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இதுவரை அனைத்து போட்டிகளிலும் களமிறங்கி இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. தற்போதைய ஃபார்மை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்று நம்புகிறோம். ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணியில் நல்ல பேலன்ஸ் கிடைக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரராக அவரின் செயல்பாடுகளுக்கு வேறு யாரும் மாற்றே கிடையாது. அவர் அணியில் இருந்தால், ரோகித் சர்மாவால் சிறந்த காம்பினேஷனில் விளையாட முடியும். அவரின் ஃபிட்னஸ் முக்கியமானது.
ஆல்ரவுண்டரிகளின் பணி முக்கியமானது. சிவம் துபே பவுலிங்கில் சில ஓவர்கள் பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினால், நிச்சயம் செய்வார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் அவர்களின் பணியை செய்வார்கள். அதேபோல் இந்திய அணியை சில டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா வழிநடத்தியுள்ளார். உலகக்கோப்பையில் இருந்தே ரோகித் சர்மா சரியான ஃபார்மில் இருக்கிறார். கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டதில் எந்தவித கட்டாயமும் எங்களுக்கு ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியா கேப்டன்சி மாற்றம் தொடர்பாக ரோகித் சர்மா கூறுகையில், உலகக்கோப்பை தொடர் இருந்ததால், நானும் விராட் கோலியும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தோம். அஜித் அகர்கர் கொஞ்சம் தாமதமாகவே இந்த செட்டப்பிற்கு வந்தார். அதனால் முந்தைய தேர்வு குழுவினரின் முடிவுகள் சில அவருக்கு தெரிந்திருக்காது என்று தெரிவித்தார்.