கேப் டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவரை உலகக் கோப்பை வெல்லாத தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி, வெற்றிக்கு மிக அருகே வந்த பின் தோல்வி அடைந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர் அந்த அணியின் வீரர்கள்.
2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் தென்னாப்பிரிக்க அணி இதுவரை டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பங்கேற்க உள்ளது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இறுதிப் போட்டி தோல்வியை மறக்க முடியவில்லை என கூறி இருக்கிறார்.

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. ஆனால், கடைசி ஐந்து ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றிக்கு மிக அருகே சென்று பின் தோல்வி அடைந்த நிலையில் அதை மறக்க நினைத்தாலும் பலரும் இறுதிப்போட்டி முடிவு குறித்து தங்களிடம் பேசி அதை மீண்டும் நினைவுபடுத்துவதாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "டி20 உலகக் கோப்பை இறுதி போட்டி முடிவை பற்றி நாம் எப்போது நினைக்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அப்போது அதைப்பற்றி பேசுகிறார்கள். என்னால் முடிந்தவரை அதை மறப்பதற்கு நினைக்கிறேன். ஆனால், அது அத்தனை எளிதாக இல்லை. ஒரு நாள் இரவு, யாரோ ஒருவர் அதைப் பற்றி என்னிடம் பேசினார். நீங்கள் எங்களுக்காக வருத்தம் அடைந்தால், அதை எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போல இருந்தது. சில விஷயங்களை நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்கவே விரும்புவோம்." என்றார் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.