பிராவிடன்ஸ் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் உகாண்டா அணி கடைசி 6 ஓவர்களில் வெறும் 31 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தியது கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தனர். குர்பாஸ் 45 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். அவர் நான்கு ஃபோர் மற்றும் நான்கு சிக்ஸ் அடித்து இருந்தார். இப்ராஹிம் சத்ரான் 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் 9 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார்.

இவர்களை வீழ்த்த முடியாமல் உகாண்டா அணியின் பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்த நிலையில் 15 வது ஓவரில் பிரையன் மசாபா திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவரது பந்து வீச்சில் இப்ராஹீம் சத்ரான் ஆட்டம் இழந்தார். அதன் பின் ஆப்கானிஸ்தான் அணி தடுமாறியது. அடுத்து அல்பேஷ் ரம்ஜானி-யின் ஓவரில் மற்றொரு துவக்க வீரர் குர்பாஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் நஜிபுல்லா சத்ரான் 2 ரன்களிலும், குலாபுதீன் 4 ரன்களிலும், ஹஸ்மத்துல்லா 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கோஸ்மாஸ் இரண்டு விக்கெட்களும், அல்பேஷ் ரம்ஜானி ஒரு விக்கெட்டும், பிரைன் மசாபா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதில் கடைசி ஆறு ஓவர்களில் உகாண்டா அணி 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசர வைத்தது.
இதற்கு முக்கிய காரணம் மசாபா தான். அவர் கடைசி ஆறு ஓவர்களில் மூன்று ஓவர்களை வீசினார். மிக கட்டுக்கோப்பாக அவர் பந்து வீசியதால்தான் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பந்துவீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட உகாண்டா அணி, அடுத்து பேட்டிங்கில் படுமோசமாக ஆடியது. ஒரு வீரர் கூட 15 ரன்களை தொடவில்லை. இந்த நிலையில் 16 ஓவர்களில் 58 ரன்களுக்கு உகாண்டா அணி ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.