ஃப்ளோரிடா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்க அணி முன்னேறியதால் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.
அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோத இருந்த குரூப் ஏ பிரிவு போட்டி மழை மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மோசமான ஆடுகளத்தின் காரணமாக கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதை அடுத்து குரூப் சுற்றில் மொத்தமாக 5 புள்ளிகள் பெற்ற அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

ஒவ்வொரு குரூப்பிலும் இரண்டு அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் குரூப் ஏ பிரிவில் இந்திய அணியை தொடர்ந்து அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் இதே குரூப்பில் இடம்பெற்று இருந்த பாகிஸ்தான அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
முன்னதாக இந்த குரூப்பில் பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து இருந்தது. கனடா அணியை மட்டுமே வீழ்த்தி இருந்தது. அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றாலும் கூட அதிகபட்சம் 4 புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. தற்போது அமெரிக்க அணி 5 புள்ளிகள் பெற்று இருப்பதால் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் நாட்டுக்கு திரும்ப உள்ளது.
குரூப் ஏ பிரிவில் இந்திய அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது. அடுத்து அமெரிக்க அணி கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதன் மூலம் நான்கு புள்ளிகளுடன் இருந்த அமெரிக்க அணி, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றாலோ அல்லது அந்த போட்டி கைவிடப்பட்டாலோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் இருந்தது. தற்போது போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதுவரை நடந்த டி20 உலக கோப்பைகளில் இதுவரை பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த படுதோல்வியால் மிகப்பெரும் சிக்கலில் உள்ளது.