ஃப்ளோரிடா : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இக்கட்டான நிலையில் சிக்கி உள்ளது. தற்போது குரூப் "ஏ" பிரிவில் இடம் பெற்று இருக்கும் பாகிஸ்தான், அந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றான சூப்பர் 8-க்கு முன்னேற முடியும்.
தற்போது குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் அமெரிக்கா முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா தான் ஆடிய மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகள் பெற்று ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா தான் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தான் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற வேண்டும். இந்த போட்டி நடைபெற இருக்கும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை மழையால் இந்தப் போட்டி கைவிடப்பட்டால் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்படி நடந்தாலும் பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பு பறிபோகும்.
பாகிஸ்தான் தனது கடைசி போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியால் அதிகபட்சமாக நான்கு புள்ளிகள் மட்டுமே பெற முடியும். எனவே, மழையால் அமெரிக்கா - அயர்லாந்து போட்டி முழுமையாக நடைபெற்றால் மட்டுமே பாகிஸ்தான் தப்பிக்கும்.
அதேபோல, பாகிஸ்தான் - அயர்லாந்து போட்டிக்கும் மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. அந்தப் போட்டி கைவிடப்பட்டாலும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாது. இப்படி பாகிஸ்தான் அணி பல வழிகளில் சிக்கலில் சிக்கி உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க அணி தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் நன்றாக ஆடி இருப்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, அயர்லாந்து அணி வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் அணி வேண்டுதலை வைத்து காத்துக் கொண்டு இருக்கிறது.