டல்லாஸ் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் ஓவர் வரை சென்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 20 ஓவர்களின் முடிவில் 159 ரன்கள் எடுத்திருந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் அபாரமாக செயல்பட்ட அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான தோல்விக்கு முக்கிய காரணமே அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தான் என பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களே விளாசி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணியின் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 9 ரன்களிலும், உஸ்மான் கான் 3 ரன்களிலும், ஃபாக்கர் ஜமான் 11 ரன்களிலும் வரிசையாக ஆட்டம் இழந்தனர். 4.4 ஓவரில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது பாகிஸ்தான் அணி.
அப்போது அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் நிதானமாக ஆடி வந்தார். விக்கெட் வீழ்ச்சியால் அவரது ஸ்ட்ரைக் ரேட் வெகுவாக சரிந்தது. அனுபவ வீரரான பாபர் அசாம் நிச்சயமாக இந்த விக்கெட் வீழ்ச்சியின் அழுத்தத்தை எளிதாக கடந்து இருக்க வேண்டும். அமெரிக்கா போன்ற அதிக அனுபவம் மற்ற அணியின் பந்துவீச்சை அவர் எளிதாக சமாளித்து விரைவாக ரன் சேர்த்து இருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு நாள் போட்டி போல தான் ஆடினார். 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதன் பின் ஷதாப் கான் 25 பந்துகளில் 40 ரன்களும், ஷஹீன் ஷா அப்ரிடி 16 பந்துகளில் 23 ரன்களும் எடுத்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. ஒருவேளை பாபர் அசாம் அதிரடியாக ஆடி இருந்தால் பாகிஸ்தான் அணி கூடுதலாக 20 ரன்கள் வரை சேர்த்து இருக்கலாம்.
இந்த நிலையில் அமெரிக்க அணியின் கேப்டன் மோனன்க் பட்டேல் அபாரமாக ஆடி 38 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். அதன் பின் ஆண்ட்ரியாஸ் 26 பந்துகளில் 35 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் 26 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். அந்த அணி சரியாக 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
அதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடந்தது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்கள் சேர்த்தது. அப்போதே பாகிஸ்தான் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அடுத்து சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியால் ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஓவரை வென்ற அமெரிக்க அணி போட்டியை வென்று சாதனை படைத்தது.
பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு பாபர் அசாமின் நிதான ஆட்டம் தான் முக்கிய காரணம் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். அவர் மட்டும் அதிரடியாக ஆடி கூடுதலாக 20 ரன்கள் சேர்த்து இருந்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருக்கும்.