மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி பங்கேற்பார்களா? என்ற கேள்வி நீண்ட காலமாக உள்ளது.
கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறிய பின் இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதாக அவர்கள் டி20 போட்டிகளை தவிர்த்து வந்தனர்.

தற்போது 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முடிந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டது. இன்னும் ஆறு மாதங்களில் டி20 உலகக்கோப்பை தொடர் வர உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி அடுத்த வாரம் டி20 உலகக்கோப்பைக்கு முன் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தன் கடைசி டி20 தொடரில் ஆட உள்ளது.
அதற்கான அணித் தேர்வுக்கு முன்னதாக ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட விரும்புகிறார்களா? என அறிய தேர்வுக் குழு முடிவு செய்தது. இதை அடுத்து தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அவர்களிடம் அது குறித்து கேட்கப்பட்டது. ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாகவே தான் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அணியின் கேப்டனாக வாய்ப்பு அளித்தால், அதை ஏற்று செயல்பட விரும்புவதாக கூறி விட்டார்.
இந்த நிலையில், விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஒதுங்குவார் என பலரும் கூறி வந்த நிலையில், அவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விரும்புவதாக கூறி குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார். இதை தேர்வுக் குழு எதிர்பார்க்கவில்லை. தற்போது டி20 அணியில் விராட் கோலிக்கு பதிலாக அவரது மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய ஸ்ரேயாஸ் ஐயரை தயார் செய்து வருகின்றனர். அதனால், தற்போது குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த குழப்பத்தை பேசி முடிவு செய்ய தேர்வுக் குழு தலைவர் அஜித் ஆகர்கர் மற்ற இரண்டு உறுப்பினர்களுடனும், கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடனும் பேச இருக்கிறார். அதன் பின்னரே ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
பிசிசிஐ அதிகாரிகளுடன் கலந்து பேசிய பின் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம், 2024 ஐபிஎல் தொடரில் ஆடினாலே போதும் டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி அவர்களுக்கு கிடைத்து விடும் என பிசிசிஐ கருதினால் அவர்கள் ஆப்கானிஸ்தான் தொடரில் சேர்க்கப்படாமல் போகலாம்.