நியூயார்க் : இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி மற்றும் சிலருக்கு தொடர்ந்து ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து அவர்களை பூதாகரமாக காட்டி வருவதாகவும், ஆனால் இந்திய அணிக்கு போட்டிகளை வென்று கொடுப்பவர் வேறு ஒரு வீரர் எனவும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிரடியாக கூறி இருக்கிறார்.
இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று உள்ளது. இந்த தொடருக்கு முன்பு விராட் கோலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பேசப்பட்டது. அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக சிலர் விமர்சனம் செய்த போது, முன்னாள் வீரர்கள் மற்றும் ஊடகங்கள் விராட் கோலிக்கு ஆதரவாக நின்றன. விராட் கோலி தான் டி20 உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுப்பார் என பலரும் கூறினர்.

அவர் மூன்றாம் வரிசையில் இருந்து மாறி துவக்க வீரராக ஆடினார். ஆனால், உலக கோப்பையில் இந்திய அணியின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலியால் ரன் குவிக்க முடியவில்லை. அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார் விராட் கோலி. அடுத்து முக்கியமான பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதே சமயம், அந்த இரண்டு போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்ட பும்ரா இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இந்த இரண்டு போட்டிகளிலும் பும்ராவே ஆட்டநாயகன் ஆகவும் அறிவிக்கப்பட்டார்.
இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட் வீழ்த்தி உள்ளார். மிக குறைவாகவே ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்திய ஊடகங்கள் விராட் கோலி மற்றும் சிலரை குறித்து அதிகமாக பாராட்டி வரும் நிலையில், சத்தமே இல்லாமல் தனியாளாக இந்திய அணிக்காக வெற்றி தேடி தந்து கொண்டே இருக்கிறார் பும்ரா. தற்போது உள்ள இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர் என்றால் அது பும்ரா தான். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தான் சிறந்த இந்திய வீரராக இருக்கிறார்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.