மும்பை: 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதன்பின் பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்திய அணி நாடு திரும்ப முடியாமல் சிரமங்களை சந்தித்தது. பின்னர் புயல் ஓய்ந்த நிலையில் பிசிசிஐ ஏற்பாடு செய்த தனி விமானத்தில் இந்தியா வந்து சேர்ந்தனர்.
இதன்பின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய வீரர்கள், மாலை மும்பை வந்தனர். இதன்பின் திறந்தவெளி பேருந்தில் மெரைன் ட்ரைவ் சாலையில் இந்திய அணி வீரர்கள் வெற்றிப் பேரணியில் ஈடுபட்டனர். இந்திய வீரர்களை டி20 உலகக்கோப்பையுடன் காண்பதற்காக அங்கு லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர்.

பேருந்தின் மீது இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையுடன் போஸ் கொடுக்க, ரசிகர்கள் இந்திய வீரர்களை பார்த்த மகிழ்ச்சியில் கரகோஷம் எழுப்பினர். இதனிடையே இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி - ரோகித் சர்மா இடையிலான நட்பை அறிந்து கொள்ளவும் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையுடன் போஸ் கொடுத்து கொண்டிருந்த போது, பின் பகுதியில் சாதாரணமாக அமர்ந்து ரோகித் சர்மா ரசிகர்கள் பார்த்து வந்தார். இதனை பார்த்த விராட் கோலி, தேசியக் கொடியை எடுத்து வந்து ரோகித் சர்மாவிடம் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், டி20 உலகக்கோப்பையை கையில் கொடுத்து, ”இங்கே வா” என்று ரோகித் சர்மாவை விராட் கோலி பேருந்தின் முன் பகுதிக்கு அழைத்து வந்தார்.
அங்கே நின்றிருந்த பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா விலகிக் கொள்ள, டி20 உலகக்கோப்பையுடன் ரோகித் சர்மா - விராட் கோலி இணைந்து போஸ் கொடுத்தனர். இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்கள் இருவரும் திறந்தவெளி பேருந்தில் இணைந்து ஜாலியாக கொண்டாடியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஓய்வை அறிவித்தனர். சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இனி வரும் காலங்களில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.