ஆன்டிகுவா : தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அவரது மகளும், மகனும் அளித்த பரிசை அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அவரது மகளும், மகனும் வாழ்த்து கூறியுள்ளனர். 2017ஆம் ஆண்டு நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் வலம் வந்தனர்.

திருமணத்திற்கு பின் விராட் கோலியின் ஆக்ரோஷம் அதிகமான நிலையில், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு "வாமிகா" என்று பெயரிட்ட விராட் கோலி, பின்னர் மகளுடன் நீண்ட நேரம் செலவிட்டு வந்தார். இதன்பின் விராட் கோலியின் ஆக்ரோஷம் களத்தில் குறைந்தே காணப்பட்டது.
இதன்பின் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு மீண்டும் மகன் பிறந்தது. இங்கிலாந்தில் பிறந்த நிலையில், சில நாட்களுக்கு பின்னரே இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து மகனுக்கு "அகாய்" என்று பெயரிட்டார். இந்த நிலையில் விராட் கோலியின் மகனும், மகளும் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் வாழ்த்து கூறியுள்ளனர்.

விராட் கோலியின் மகனும், மகளும் தங்களின் பாதத்தை பேப்பர் ஒன்றில் பதித்து Happy Fathers Day என்று வாழ்த்தியுள்ளனர். இதனை விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, ஒரு மனிதரால் எப்படி இவ்வளவு விஷயங்களில் சிறப்பாக செயல்பட முடிகிறது என்று கேள்வியும் எழுப்பி அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. முபாசாவுக்கு சிம்பா வாழ்த்து கூறியுள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் விராட் கோலி இதுவரை தனது மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.