மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்கி சில ஆரம்ப போட்டிகளில் ரசிகர்களின் கவனத்தை இது ஈர்த்திருக்கிறது. பல கத்துக்குட்டி அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதால் ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வம் ஏற்படாமல் இருந்தது.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் கத்துக்குட்டி அணிகள் சிறப்பாக விளையாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். நேற்று ஆட்டத்தில் கூட பி என் ஜி அணி அபாரமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ்க்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

இந்த நிலையில் இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலியை சரியாக பயன்படுத்த வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கவில்லை.
இந்த சூழலில் விராட் கோலியை எந்த இடத்தில் களம் இறக்க வேண்டும் என்ற யோசனையை கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க ஆடுகளங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் தோய்வாக இருக்கிறது. இதனால் போட்டி தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஆங்கர் ரோல் செய்ய ஒரு வீரர் தேவை.
அதனை விராட் கோலியிடம் ஒப்படைக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி அபாரமாக விளையாடினார். மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் நல்ல விதத்தில் இருந்தது. இதனால் விராட் கோலியை ரோகித் சர்மாவுடன் தொடக்க இடத்தில் களமிறக்கி இந்திய அணி சோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் ஐந்தாம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி நம்பர் ஒன் வீரராக ரோகித் சர்மாவுடன் களம் இறக்க வேண்டும் என்றும் அதன் பிறகு விராட் கோலிக்கு எந்த இடம் வழங்கலாம் என்பது குறித்து யோசிக்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். விராட் கோலி நம்பர் ஒன் வீரராக களம் இறக்கினால் அவர் தன்னுடைய ஸ்டைலுக்கு விளையாடி ஒரு முனையில் விக்கெட்கள் விழாமல் பார்த்துக் கொள்வார் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.