மும்பை : இந்திய டி20 அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட உள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த முறை விராட் கோலியை ஓரங்கட்ட வேண்டி மும்பை லாபி காய் நகர்த்தி வருவதாக சந்தேகம் கிளம்பி இருக்கிறது.
2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியது. அதன் பின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 அணியில் இடம் பெறவில்லை. இருவரும் தாமாகவே டி20 அணியில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது.

கடந்த இரண்டு மாதம் முன்பு நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் போது ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருமே 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். இதை அடுத்து இருவரும் ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்றனர்.
ரோஹித் சர்மா மூன்று போட்டிகளில் ஒரு சதம் அடித்து தனது டி20 ஃபார்மை நிரூபித்தார். ஆனால், விராட் கோலி ஒரு போட்டியில் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தாலும் மற்றொரு போட்டியில் டக் அவுட் ஆகி இருந்தார். மேலும், அவர் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பிட்ச்களில் நிதான ஆட்டம் ஆடுவதாக தேர்வுக் குழு கருதுகிறது.
எனவே, அவரை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வைக்க விருப்பம் இல்லை என பிசிசிஐ-யில் பலர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. விராட் கோலி அணியில் இடம் பெற்றால் திலக் வர்மா அல்லது சிவம் துபே அணியில் இருந்து நீக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த வீரர். சிவம் துபே மும்பை மாநில அணியை சேர்ந்த வீரர். இந்திய கிரிக்கெட்டில் மும்பை மாநில கிரிக்கெட்டின் ஆதிக்கமும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கமும் அதிகம் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் விராட் கோலியை நீக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
விராட் கோலியை அணியை விட்டு நீக்கும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கு பிசிசிஐ அளித்து இருப்பதாகவும், அவரே தனிப்பட்ட முறையில் விராட் கோலியிடம் இது குறித்து பேச இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.