மும்பை : டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தான் நடைபெறுகிறது. இந்த ஆடுகளங்கள் இந்தியாவுக்கு கைதேர்ந்த ஆடுகளங்கள் ஆகும். மேலும் இந்தியாவுக்கு சாதகமான சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் மைதானங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும், சில குறைகள் இருக்கின்றது. குறிப்பாக விராட் கோலி பேட்டிங் தடுமாறி வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.

இதுவரை விராட் கோலி மூன்று போட்டிகளில் மொத்தமாக ஐந்து ரன்கள் தான் அடித்திருக்கிறார். எனினும் அவரை குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் அவரை கொஞ்சம் தனியாக விடுங்கள் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் விராட் கோலி அரசனுக்கெல்லாம் அரசர் அவரைப் பற்றி கவலை கொள்ள தேவையில்லை. கொஞ்சம் கோலியை தனியாக விடுங்கள்.
நாளை இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தான் விளையாட போகிறது. நிச்சயம் அவர் ரன்கள் அடிப்பார். இந்தியாவுக்கு பெரிய வெற்றியை அவர் பெற்றுக் கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும் பௌலிங் குறித்து பேசிய ஸ்ரீகாந்த், தாம் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் நிச்சயம் குல்தீப் யாதவை சேர்ப்பேன் என்று கூறியுள்ளார். முஹம்மது சிராஜ் நல்ல பவுலராக இருந்தாலும் குல்தீப், இந்திய அணிக்கு ஒரு மேட்ச் வின்னர் ஆக திகழ்வார் என்றும் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்களில் 250 ரன்கள் எல்லாம் அடிப்பது கடினம் என்றும் 160 -170 ரன்கள் அடித்தாலே வெற்றி பெற்று விடலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் விராட் கோலி போல் புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும் என்றும் விராட் கோலியின் அனுபவம் இந்த ஆடுகளங்களில் நிச்சயம் கை கொடுக்கும் என்றும் ஹைடன் கூறியுள்ளார்.