மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை தொடருடன் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இனி அவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். இந்த நிலையில் அவரால் இந்திய அணியில் கட்டாயமாக்கப்பட்ட யோ யோ தேர்வு எனப்படும் உடற் தகுதி பரிசோதனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி கேப்டனாக இருந்தபோது இந்த யோ யோ தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் அளிக்கப்படும் என்ற நிலை இருந்தது. தற்போது விராட் கோலி டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார். அவர் கேப்டனாக இருந்த போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டும் ஓய்வு பெற்று விட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த தேர்வை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அதற்கு பதிலாக இனி வேறு சில பரிசோதனைகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த யோ யோ தேர்வால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்ததும், உடற்தகுதி இருந்தும் வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்கி வந்ததாலும் இந்த தேர்வை நீக்கி உள்ளது பிசிசிஐ.
முன்பு யோ யோ தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி யுவராஜ் சிங்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் 2019 உலகக்கோப்பைக்கு முன் யுவராஜ் சிங் யோ யோ தேர்வில் தேர்ச்சி பெற்றார். எனினும், அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த தேர்வால் இது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக ரோஹித் சர்மா அந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற வதந்தியும் அப்போது இருந்தது. அதன் காரணமாக அவரை அணியவிட்டு நீக்க உள்ளதாக 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் முடிவில் சர்ச்சைகள் எழுந்தன.
இப்படி அந்த தேர்வால் பல்வேறு சர்ச்சைகள் இருந்த நிலையில் அதை பிசிசிஐ நீக்கி உள்ளது. உடற்பகுதி மட்டும் இருந்தால் போதாது ஒரு வீரர் வந்து காயம் இன்றி விளையாட வேண்டும் என பிசிசிஐயின் உயர் அதிகாரிகள் கருதுவதால் இனி அதற்கான மூன்று வெவ்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி இனி ஒரு வீரர் எந்த அளவு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதை பரிசோதனை செய்ய தேசிய உடற்பகுதி தேர்வு அளவுகோல் ஒன்று உருவாக்கப்படும். அதில் பல்வேறு விதமான சோதனைகள் நடத்தப்படும். ஆனால், இதை வைத்து ஒரு வீரரை இந்திய அணியில் இருந்து நீக்க முடியாது. இந்தத் தேர்வு 12 வாரங்கள் முதல் 16 வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
இரண்டாவதாக ஒரு வீரரின் செயல்பாட்டுத் திறனை பரிசோதிக்க ஆறு வாரங்களுக்கு ஒரு முறையும், மூன்றாவதாக ஒரு வீரர் காயம் அடையாமல் தடுக்க இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் பரிசோதனைகள் நடத்தப்படும். ஆனால், இதில் தகுதி பெற்றால் தான் இந்திய அணியில் இடம் என எந்த கட்டாயமும் இல்லை. இதன் மூலம் ஒரு வீரரின் கிரிக்கெட் திறமையை வைத்தே இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படுவார். இந்த மூன்று சோதனைகளும் வீரர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உதவும் கருவியாக மட்டுமே பயன்படும்.