மும்பை : டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிபுல் ஹசன் நான்கு பந்துகளில் வெறும் மூன்று ரன்கள் மட்டும் தான் சேர்த்தார்.
தென்னாப்பிரிக்கா வீரர் ஆண்ரிச் நோக்கியா வீசிய பந்தை அடிக்க முற்பட்டு அவர் கேட்ச் ஆனார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஷகிபுல் ஹசனை கடுமையாக சாடி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், நான் கடைசி டி20 உலக கோப்பையை பார்க்கும் போதே ஷகிபுல் ஹசன் ஏன் இன்னும் விளையாடுகிறார் என்று நினைத்தேன். அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றிருக்க வேண்டும். கிரிக்கெட் உலகில் இவ்வளவு சீனியர் வீரராக இருந்து அணியின் கேப்டன் ஆகவும் செயல்பட்டு இப்படி மோசமாக ஆட்டம் இழப்பதை நினைத்து ஷகிபுல் ஹசனுக்கு வெட்கமாக இல்லையா?
நீங்களே முன்வந்து நான் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுகிறேன். நான் விளையாடியது போதும் என்று அறிவிக்க வேண்டும். ஷகிபுல் ஹசன் ஒன்றும் ஆடம் கில்கிறிஸ்ட்டோ மேத்யூ ஹைடனோ கிடையாது. நீ ஒரு வங்கதேச வீரர்! உன்னுடைய பலம் ஏதோ அதற்கு தகுந்த மாதிரி விளையாடு. உங்களிடம் அனுபவம் இருக்கிறது என்று ஒரே காரணத்திற்காக தான் உலகக் கோப்பை அணியில் நீங்கள் இடம்பெற்று இருக்கிறீர்கள்.
உங்கள் அனுபவத்தை அணியின் வெற்றிக்காக பயன்படுத்துங்கள். ஆடுகளத்தில் கொஞ்ச நேரம் செலவழித்து விளையாடுங்கள் என்று ஷேவாக் கடுமையாக சாடிருக்கிறார். சேவாக்கில் இந்த பேச்சு வங்கதேச ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்து இருக்கிறது. ஷேவாக் விமர்சனம் செய்த விதம் தவறு என்றும் வங்கதேச கிரிக்கெட் வீரர்களை தரக்குறைவாக பேசுவது சரி கிடையாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.