மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு அளிக்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகையில் தேர்வுக் குழுவினருக்கு சமமான தொகையை அளிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு தேர்வுக் குழுவின் பங்கும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பாக ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பார்படாஸில் இருந்து நேற்று நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அதன்பின் மாலை மும்பையில் வெற்றிப் பேரணியில் பங்கேற்ற இந்திய வீரர்கள், தொடர்ந்து வான்கடே மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ சார்பாக இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதனை இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ வரலாற்றில் உலகக்கோப்பை வென்ற அணிக்கு அளிக்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.
இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக் பேசுகையில், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினருக்கு ரசிகர்கள் பாராட்டை அளிக்க வேண்டும். ஏனென்றால் தேர்வுக் குழுவினர் பல்வேறு வீரர்கள் மீதும் நம்பிக்கை வைத்து தேர்வு செய்து அனுப்பினார்கள். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் எப்படியான வீரர்கள் தேவை என்பதில் மனதில் வைத்து அணியை உருவாக்கியுள்ளனர். அஜித் அகர்கர் ஒருநாளும், நான் தான் அணியை உருவாக்குகிறேன் என்று சொன்னதில்லை.
ஒரு வீரரை தேர்வு செய்வதற்கு முன்பாக மற்ற 4 தேர்வு குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்வார். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் ஒவ்வொரு வீரருக்கு குறைந்தது 3 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, இந்திய அணியில் தேர்வு செய்வார்கள். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 150-160 ரன்கள் எடுத்தாலே போதும். நம்மால் வெற்றிபெற முடியும் என்று முன்பாகவே அறிந்து செயல்பட்டுள்ளார்கள்.
அதற்கேற்ப மன உறுதியுள்ள பேட்ஸ்மேன்களை தேர்வு செய்தனர். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் வீரர்களை மட்டுமே தேடாமல், 120 முதல் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் வீரர்களின் தேவை உள்ளது என்று சிந்தித்துள்ளனர். இதனால் தேர்வு குழுவினருக்கும் போனஸ் மற்றும் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.