2024 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் பெயர் இடம் பெறவில்லை. அது குறித்து பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் இது குறித்து தன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாட்டை வைத்து இந்திய டி20 அணியை தேர்வு செய்து இருந்தால் முகமது சிராஜை ஏன் தேர்வு செய்தீர்கள்? அவர் ஐபிஎல் தொடரில் விக்கெட் எடுக்கவில்லை என சேவாக் கூறியிருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படவில்லை என்ற காரணத்தால் ரிங்கு சிங் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், சேவாக் முகமது சிராஜ் நிலையை சுட்டிக்காட்டி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி தேர்வில் பாகுபாடு காட்டப்பட்டு இருப்பதாக சேவாக் கூறியிருக்கிறார். சில வீரர்கள் அவர்களின் மதிப்பு மற்றும் செல்வாக்கை வைத்து அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறுகிறார் சேவாக்.
உதாரணத்திற்கு சூர்யகுமார் யாதவ் 2024 ஐபிஎல் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை இருந்தாலும் அவர் அதிரடி ஆட்டக்காரர் என்பதால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் சில நாள் சரியாக ஆடாமல் இருக்கலாம் ஆனாலும் அவரை அணியில் தேர்வு செய்து தான் ஆக வேண்டும் என்றால் அதேபோலத் தான் ரிங்கு சிங்கும். ஆனால், ரிங்கு சிங் இளம் வீரர். சூர்யகுமார் யாதவ் அனுபவ வீரர். அந்த அடிப்படையில் ரிங்கு சிங்கை விட்டுவிட்டு அதிக செல்வாக்கு கொண்ட சூர்யகுமார் யாதவை அணியில் தேர்வு செய்து உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார் சேவாக்.
மேலும், இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்று இருப்பதையும் விமர்சனம் செய்துள்ளார் சேவாக். 2024 டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட மாட்டார்கள் என்று முன்பு சொன்னோம். ஆனால், இப்பொழுதும் நாம் அடுத்த உலகக் கோப்பையில் அவர்கள் ஆட மாட்டார்கள் என்று சொல்கிறோம் என அவர்கள் அணியில் இடம் பெற்று இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
டி20 அணியின் முதல் 15 வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை என்றாலும் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான். இந்திய வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.