மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் தோல்வியைத் தழுவி தற்போது தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லாமல் வேறு நாடுகளுக்கு குடும்பத்துடன் சென்று ஓய்வில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல் சுற்றில் வெளியேறிய பாகிஸ்தான் அணி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுப் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய பொறுமையை இழந்த ஹரிஷ் ரவுப் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஹரிஷ் ரவுப் செருப்பு எல்லாம் கழற்றிக்கொண்டு அந்த ரசிகரை அடிக்க ஓடி பாய்ந்து உள்ளார். அப்போது அவருடைய மனைவி ஹரிஸ் ரவுப்பை தடுத்து வேண்டாம் அமைதியாக இருங்கள் என்று கூறினார். அப்போது அங்கு இருந்த மற்ற ரசிகர்கள் ஹரிஷ் ரவுப்பை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
எனினும் விடாத அந்த ரசிகர் தொடர்ந்து ஹரிஷ் ரவுப்பை திட்டிக் கொண்டே இருந்தார். அப்போது உருது மொழியில் இருவரும் மாறி மாறி திட்டிக்கொண்டனர். இதில் ஹரிஷ் ரவுப் உங்கள் தந்தை உன்னை இப்படி தான் வளர்த்தாரா என்று கேட்ட ஆடியோ மட்டும் காதில் விழுந்தது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி தொடரை விட்டு முதல் சுற்றில் இருந்து வெளியேறியது.
அது மட்டுமல்லாமல் ஆசிய கோப்பை, 2023 உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை, இங்கிலாந்து தொடர், ஆஸ்திரேலியா தொடர் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி வருகிறது. மேலும் பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் அந்த அணி வீரர்கள் மீது கோபத்தில் உள்ளனர்.