நியூயார்க் : 2024 டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய அணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூப்பர் 8 மற்றும் அரை இறுதிச் சுற்றுகளில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பெரிய அணிகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி வில்லனாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸ் அணி பின் தங்கிய அணிகளில் ஒன்றாக மாறிவிட்டது. இரண்டு முறை டி20 உலகக்கோப்பை வென்ற அந்த அணி, டி20 தரவரிசையிலும் கூட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால், தற்போது உலகின் சிறந்த டி20 வீரர்களை கொண்டுள்ள அணிகளில் அதுவும் ஒன்று. அந்த அணியைச் சேர்ந்த பல டி20 வீரர்கள் தேசிய அணியை விட்டுவிட்டு பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்க செல்வதால் அந்த அணி சர்வதேச அளவில் பின்தங்கியது போல காட்சி அளிக்கிறது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் வலுவான, அனுபவம் நிறைந்த வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. மேலும், இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அந்த அணி உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த வலுவாக காட்சியளிக்க காரணமே அந்த அணியில் இடம் பெற்றுள்ள சில வீரர்கள் தான். ஐபிஎல் போன்ற உலகின் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று அதிக அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கும் நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பாவல், ஷிம்ரன் ஹெட்மயர், ஷேர்ஃபேன் ரூதர்போர்டு, ஆண்ட்ரே ரஸ்ஸல், அல்சாரி ஜோசப் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். இதை அடுத்து அந்த அணி எந்த சூழ்நிலையில் இருந்தும் போட்டியில் வெற்றி பெறும் அளவுக்கு வலுவானதாக காட்சியளிக்கிறது.