சென்னை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 4 ஆல்-ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளதற்கு சரியா என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு ரசிகர்களிடையே விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் வழக்கம் போல் சீனியர் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, பும்ரா, சிராஜ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் இளம் வீரர்களான சிவம் துபே, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணியில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவிலான ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 கிரிக்கெட்டில் நீண்ட பேட்டிங் வரிசை வேண்டுமென்பதால், ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் ஜடேஜா, அக்சர் படேல், சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா என்று 4 ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் சிவம் துபே பவுலிங் செய்யவே இல்லை. மற்றொரு பக்கம் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா நேரடியாக டி20 உலகக்கோப்பையில் தான் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.
அதேபோல் ஜடேஜாவின் பேட்டிங் ஃபார்ம் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் அக்சர் படேல் மட்டுமே ஐபிஎல் தொடரிலும் ஆல்ரவுண்டராக சிறப்பாக ஜொலித்து வருகிறார். அமெரிக்கா மைதானங்களில் சிவம் துபேவின் பேட்டிங் அத்தியாவசிய தேவை என்பதால், நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஃபார்மில் இல்லாத நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் முடிவு சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஜடேஜா அல்லது அக்சர் படேலை ரிசர்வ் வீரர்கள் பட்டியலுக்கு மாற்றிவிட்டு, ரிங்கு சிங்கை ஃபினிஷராக இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.