கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் குரூப்-1 பிரிவிலிருந்து எந்த இரண்டு அணிகள் அரையிறுதிக்கு போகப் போகிறது என்று இன்னும் தீர்மானம் ஆகவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்காமல் இருந்தால் கூட இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும். இந்த நிலையில் அரை இறுதி சுற்றுக்கான அட்டவணை என்ன? இந்தியா யாருடன் அரையிறுதி போட்டியில் மோத போகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

அரை இறுதி போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மோதும் அரை இறுதி ஆட்டம் வியாழக்கிழமை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்து இடம்தான் அரையிறுதியில் தோல்வியை தழுவியது.
இன்னும் சொல்லப்போனால் இந்தியா நிர்ணயித்த இலக்கை விக்கெட் இழக்காமல் இங்கிலாந்து அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழலில் மீண்டும் அதே அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கப் போகிறது. இதனால் கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் ஒரு வாய்ப்பு ரோகித் சர்மா படைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் கயானா ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால் இங்கிலாந்தை விட இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது. ஒருவேளை ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டால் கூட புள்ளி பட்டியலில் இங்கிலாந்தை விட இந்திய அணி முதல் இடத்தை பிடித்திருப்பதால் இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல கூடும்.
இதேபோன்று மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அல்லது ஆஸ்திரேலியாவை சந்திக்கக் கூடும். எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் மோதிய இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மீண்டும் டி20 உலக கோப்பை பைனலில் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.