சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது ரிக்கி பாண்டிங் ஆகியோர் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்-ன் பதவிக்காலம் ஜூன் மாதம் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் பிசிசிஐ தரப்பில் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் வகையில், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவியில் இருந்து வரும் ராகுல் டிராவிட், பதவியில் தொடர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் பயிற்சியாளருக்கான போட்டியில் டாம் மூடி, ரிக்கி பாண்டிங், பிளெமிங், ஆஷிஷ் நெஹ்ரா, கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கவுதம் கம்பீர், ரிக்கி பாண்டிங் மற்றும் பிளெமிங் ஆகியோர் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான பயிற்சியாளர்களாக இருப்பதால், ரேசில் முன்னணி உள்ளனர். அதேபோல் இந்திய அணியின் இளம் வீரர்களுடன் தொடர்ந்து ஐபிஎல் தொடர் மூலம் பயணித்து வருவதால், வீரர்களுடன் நல்ல புரிதலும் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஆனாலும் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்கவே பிசிசிஐ விரும்புவதாக தெரிய வருகிறது. ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்களான கேரி கிறிஸ்டன் மற்றும் டங்கன் பிளெட்சர் ஆகியோரின் கீழ் இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. பிட்ச், சூழல் ஆகியவை மீது சிறந்த புரிதல் இருக்கும் என்பதால், இந்திய அணிக்கும் உதவியாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்தால், பயிற்சியாளரை மாற்றுவதன் மூலமாக இந்திய அணி மீதான விமர்சனங்களை கட்டுப்படுத்த முடியும். இதனால் ரிக்கி பாண்டிங், பிளெமிங் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளராக வரவே அதிக வாய்ப்புகள் உள்ளது.