பிரிட்ஜ்டவுன்: 2019 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. அதன் மூலம் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை வென்றது. அந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களில் ஓரளவு அடங்கி உள்ள நிலையில், இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா செய்த தவறு என்ன என விமர்சகர்கள் விவரித்து உள்ளனர்.
இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்தபோது முதல் மூன்று விக்கெட்களை 34 ரன்களுக்கு இழந்தது. அப்போது இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது. ஆனால், அதன் பின் 15 வது ஓவர் வரை தென்னாப்பிரிக்க அணியின் ஆதிக்கமே இருந்தது. குறிப்பாக 13 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது தென்னாப்பிரிக்கா.

அப்போது வெற்றிக்கு 7 ஓவர்களில் 68 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அந்த சூழலில் களத்தில் இருந்த டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி இனி சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என திட்டமிட்டனர். அதற்கு ஏற்ப 14 வது ஓவரை குல்தீப் யாதவும், 15 வது ஓவரை அக்சர் பட்டேலும் வீசினர். 14 வது ஓவரில் டேவிட் மில்லர் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் 14 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா.
அடுத்து 15 வது ஓவரில் இரண்டு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்தார் கிளாசன். அந்த ஓவரில் 24 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா. தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக ரன்கள் குவித்ததால் உற்சாகத்தில் இருந்தார் கிளாசன். அந்த ஓவரில் அவர் கைமுஷ்டியை மடக்கி நான்கு பவுண்டரி அடித்ததை கொண்டாடினார். எப்போதுமே வெற்றி பெறுமுன் கொண்டாடக்கூடாது என்ற பழமொழி ஒன்று உள்ளது. ஆனால், கிளாசன் 15 வது ஓவரிலேயே தென்னாப்பிரிக்கா இனி 30 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்ததால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணி அதிக தன்னம்பிக்கையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அதுதான் தென்னாப்பிரிக்க அணியின் சரிவுக்கு வித்திட்டது. அடுத்து 16 வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது மில்லர் - கிளாசன் ஜோடி. அதன் பின் 17 வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசினார். இவர் முழு நேர வேகப் பந்துவீச்சாளர் இல்லை என்பதால், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேலை பந்துவீச்சை தாக்கியது போல ஹர்திக் பாண்டியா ஓவரிலும் அதிரடியாக ஆடலாம் என திட்டமிட்ட கிளாசன் அதிக தன்னம்பிக்கையில் அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்றார். ஆனால் பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வசம் கேட்ச் ஆனது. கிளாசன் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அப்போது தென்னாப்பிரிக்க அணியில் களத்தில் இருந்த டேவிட் மில்லர் மட்டுமே ஒரே முழுநேர பேட்ஸ்மேன். மற்ற ஐந்து வீரர்களும் பந்து வீச்சாளர்களே. அவர்களால் பெரிய அளவில் பேட்டிங் செய்ய முடியாது. இதை அடுத்து தென்னாப்பிரிக்க அணி அடுத்த மூன்று ஓவர்களில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது. கிளாசன் 15வது ஓவரிலேயே வெற்றி மனநிலைக்கு செல்லாமல் பேட்டிங்கில் கவனமாக ஆடி இருந்தால் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியாவின் அற்புதமான பந்துவீச்சை சமாளித்து வெற்றிக்கு அருகே செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.