மும்பை : 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை சேர்ந்த வீரர்களில் பெரும்பாலான வீரர்கள் அமெரிக்கா கிளம்பிச் சென்றுள்ளனர்.
2024 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிப்போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அமெரிக்கா கிளம்பிச் சென்றனர்.

ஆனால் அந்த குழுவில் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. ஹர்திக் பாண்டியா குறித்து சில சர்ச்சைகள் நிலவுகின்றன. அவர் நேரடியாக லண்டனில் இருந்து அமெரிக்கா செல்வார் என கூறப்படுகிறது. ஆனால், முக்கியமான வீரரான விராட் கோலி ஏன் மற்ற இந்திய அணி வீரர்களுடன் செல்லவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து விசாரித்த போது, அவர் தாமதமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. அவர் தன்னால் உடனடியாக அமெரிக்காவுக்கு கிளம்பிச் செல்ல முடியாது என பிசிசிஐ-இடம் கூறியதாகவும், அதன் காரணமாக பிசிசிஐ அவரது விசா நடைமுறைகளை சில நாட்கள் தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது.
எனவே, அவர் வரும் மே 30 அன்று தான் அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறார். ஜூன் 1 அன்று இந்தியா - வங்கதேசம் மோதும் பயிற்சிப் போட்டி நடைபெற உள்ளது. விராட் கோலி தாமதமாக செல்வதால் அந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதை அடுத்து மற்ற இந்திய வீரர்கள் அமெரிக்கா கிளம்பிச் செல்லும் போது விராட் கோலிக்கு மட்டும் ஏன் அதில் தளர்வு அளிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
என்னதான் ஐபிஎல் தொடரில் விராட் கோலி சிறப்பாக ஆடி இருந்தாலும் இந்திய அணியுடன் ஒன்றாக இணைந்து பயிற்சிப் போட்டியில் ஆடுவதன் மூலம் மற்ற இந்திய வீரர்களுக்கும் அணியில் ஒவ்வொருவரின் இடம் என்ன, அவர்களது தேவை என்ன என்பது தெளிவாக புரியும். அதற்காகவே பயிற்சிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் மூத்த வீரரான விராட் கோலி அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்த முறை அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடத்த முக்கிய காரணம் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு இந்த விளையாட்டின் முகமாக விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.