சென்னை : 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாமல் அப்போதைய கேப்டன் தோனியால் கழற்றிவிடப்பட்டவர் சஞ்சு சாம்சன்.
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த தொடரில் டாப் அணிகள் மட்டுமல்லாமல் 20 அணிகள் பங்கேற்ப இருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் ஐசிசி தொடர் நடத்தப்பட உள்ளதால், புதிய வணிகத்தையும் உருவாக்க ஐசிசி தீவிரமாக உள்ளது.

அதற்கேற்றப்படி இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பதற்காக போராடி வரும் சஞ்சு சாம்சன், முதல்முறையாக ஐசிசி தொடரில் விளையாட உள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பிடித்த போதும், ஒரு போட்டியில் கூட தோனி அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதன்பின் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அனுபவமில்லாத வீரர் வேண்டாம் என்று கூறி தோனி அனுபவ வீரரான முரளி விஜயை அழைத்து சென்றார்.
இதன்பின் ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சன் எங்கே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினாலும், அவரும் இன்கன்சிஸ்டன்சி பிரச்சனையால் சிரமத்தை சந்தித்தார். கடந்தாண்டு நடந்த உலகக்கோப்பை தொடருக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்கவில்லை.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் சஞ்சு சாம்சன் அசத்தலாக விளையாடினார். 15 இன்னிங்ஸ்களில் 531 ரன்களை விளாசிய சஞ்சு சாம்சன், மிடில் ஆர்டரில் நம்பிக்கையான வீரராக காணப்பட்டார். இதன் காரணமாகவே சஞ்சு சாம்சனை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ஐசிசி தொடரில் விளையாட சஞ்சு சாம்சன் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், அதனை பயன்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.