மும்பை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்க தயாராக இருக்கிறதா என்று முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தான் அடுத்த இலக்கு என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை மீண்டும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய அணி அடுத்தடுத்து ஐசிசி தொடர்களை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆகியவை நடக்கவுள்ளது. இந்த இரு ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடந்த முறை தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான் என்று தெரிவித்திருந்தார்.
சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. கடைசியாக 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட்டது. அதன் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போது, பாகிஸ்தான் அணி வென்று சாதனை படைத்தது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தானுக்கு பயணிக்கவில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன.
கடந்த முறை பாகிஸ்தானில் நடக்கவிருந்த ஆசியக் கோப்பை தொடர், பிசிசிஐ தலையீட்டால் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டன. ஆனால் இம்முறை 8 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இந்திய அணிக்கு மட்டும் ஸ்பெஷலாக வேறு நாட்டில் போட்டிகளில் நடத்துவது இயலாத விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசுகையில், டி20 உலகக்கோப்பை வெற்றியால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்கும் என்று ஜெய் ஷா சிக்னல் கொடுத்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்து ஜெய் ஷா எந்த சிக்னலையும் கொடுக்கவில்லை. அவரிடம் இருந்து பாசிட்டிவ் சிக்னல் கொடுக்கப்பட்டாலும், எனக்கு எந்த ஆர்வமும் வராது.
ஏனென்றால் அது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பணியல்ல. அது ஐசிசியின் பணியாகும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால், நிச்சயம் வரவேற்போம். ஒருவேளை வரவில்லை என்றால், ஐசிசி தான் நடவடிக்கை எடுக்கும். இதன் மூலமாக ஐசிசி யாருக்கு சாதகமாக இருக்கிறது, எவ்வளவு நடுநிலையுடன் உள்ளது என்பதும் தெரிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.