மும்பை : 2024 ஐபிஎல் தொடரால் இந்திய டி20 அணியில் தனது துவக்க வீரர் வாய்ப்பை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இழக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 ஐபிஎல் தொடர் முடிந்த சில நாட்களில் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் இடையே உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் துவக்க வீரராக கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே நிரந்தரமாக இடம் பிடித்துள்ளார். மற்றொரு துவக்க வீரராக ஆட ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த மூவரில் ருதுராஜ் கெய்க்வாட் மாற்று வீரர் என்ற அளவிலேயே அணியில் இடம் பெற இருக்கிறார். ரோஹித் சர்மாவுடன் போட்டிகளில் களமிறங்க உள்ள அந்த துவக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் ஜெய்ஸ்வால் 5 இன்னிங்க்ஸ்களில் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதன் மூலம் அவர் டி20 போட்டிகளில் மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஆனால், இதே ஜெய்ஸ்வால் தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனி ஆளாக போட்டிகளை வென்று கொடுக்க காரணமாக இருந்தார்.
மறுபுறம் சுப்மன் கில் முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாத நிலையில் அதன் பின் 89 ரன்கள் மற்றும் 72 ரன்கள் குவித்து தன் ஃபார்மை நிரூபித்து இருக்கிறார். எனவே, சுப்மன் கில் துவக்க வீரராக இடம் பெற அதிக வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் இந்திய அணியில் மொத்தமாக மூன்று துவக்க வீரர்களை தேர்வு செய்வதே நடைமுறையாக உள்ளது. அதன்படி பார்த்தால் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோருடன் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே அணியில் இடம் பெற முடியும்.
ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதம் அடித்து விட்ட நிலையில் ஜெய்ஸ்வால் நிலை தான் மோசமாக உள்ளது. அவர் இனி வரும் போட்டிகளிலும் ரன் குவிக்காமல் போனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போகலாம்.