நியூயார்க் : இந்திய அணி அடுத்து 2024 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. முதற் கட்டமாக வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆட உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் இளம் வீரரான ஜெய்ஸ்வால்-ஐ ஓரங்கட்டி வைக்க இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருக்கிறார்.
அதற்கு காரணம், மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை இந்திய அணியில் சேர்த்தது தான் என அதிரடியாக விமர்சனம் செய்துள்ளார். 2022 டி20 உலக கோப்பையில் இந்திய அணி இறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்தது. அதன் பின் ஓராண்டு வரை மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராத் கோலிக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

அப்போது இனி இந்திய டி20 அணி இளம் வீரர்களை மட்டுமே கொண்டு போட்டிகளில் விளையாடும் என சொல்லப்பட்டது. 2024 டி20 உலக கோப்பையிலும் இளம் வீரர்கள் கொண்ட அணி தான் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 அணியில் இடம் பெற்றனர். ரோஹித் சர்மா அணியின் கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் துவக்க வீரர்களாக விளையாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். அவர்களது அனுபவம் அணிக்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், டி20 போட்டி என்பது அதிரடியாக ஆடக்கூடிய இளம் வீரர்களுக்கான போட்டியாக மாறி வருகிறது. மேலும், கடந்த ஐந்து அல்லது ஆறு டி20 உலகக்கோப்பை தொடர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா பங்கேற்றும் இந்திய அணியால் உலகக்கோப்பை வெல்ல முடியவில்லை.
இதை சுட்டிக்காட்டும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தற்போது மூத்த வீரர்களை அணியில் சேர்த்து இருப்பதால் அதிரடியாக ஆடக் கூடிய இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலை வெளியே உட்கார வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறி இருக்கிறார்.
இது பற்றி மஞ்ச்ரேக்கர் கூறுகையில், "என்னைக் கேட்டால் மூத்த வீரர்களை விட இளம் வீரர்களை தான் அணியில் சேர்த்து இருக்க வேண்டும். ஆனால், நமது தேர்வு குழுவை சேர்ந்தவர்கள் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை ஆட வைப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் தற்போது அணியிலும் இடம் பெற்று இருக்கிறார்கள். விராட் கோலியை மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய வைப்பது சாத்தியம் இல்லை. அது அப்படி நடந்தால் விராட் கோலியின் முழு ஆற்றலை இந்திய அணி பெற முடியாது. ரோஹித் சர்மா எப்படியும் துவக்க வீரராக தான் ஆடுவார். அந்த வகையில் அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை மட்டுமே ஆட வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது." என்றார்.
மேலும், "ரோஹித், கோலி - இருவரும் வலது கை பேட்ஸ்மேன்கள். துரதிஷ்டவசமாக இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் வெளியே அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இளம் வீரர்கள் கொண்ட அணியுடனே உலக கோப்பையில் பங்கேற்று இருக்கலாம். அது நிச்சயம் வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால், இந்தியா தற்போது மூத்த வீரர்களை நம்பி இருக்கிறது. இந்த திட்டம் பல ஆண்டுகளாகவே வேலை செய்யவில்லை. இந்த முறையாவது இது வேலை செய்யும் என நம்புவோம்." என மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார்.