லாகூர் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வந்துள்ள பாகிஸ்தான் அணியை பார்த்தால் கிரிக்கெட்டே விளையாட தெரியாத சின்ன பசங்கள் போல் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாசர் அராஃபத் கடுமையாக சாடியிருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. எனினும் இந்த தொடரில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் யாசர் அராஃபத், பாகிஸ்தான் அணியை கடுமையாக சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் டி20 தொடர் நடைபெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் நானும் இருந்தேன். அப்போது இங்கிலாந்து அணியை பார்த்தபோது தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள் போல் இருந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் விளையாட தெரியாத சின்ன பசங்க போல் இருந்தார்கள்.
இந்த போட்டியை பார்க்க வந்த ரசிகர்களும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு பார்த்து கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். பாகிஸ்தான் அணி விளையாடிய விதத்தை பார்க்கும் போது கொஞ்சம் கூட அது தொழில் முறை கிரிக்கெட் போல் இல்லை. உலகமே வேறு எங்கேயோ நம்மை தாண்டி முன்னேறி சென்று விட்டது.
ஆனால் பாகிஸ்தான அணி பல விஷயங்களில் பின்தங்கி இருக்கின்றது. உதாரணத்திற்கு திறமை,உடல் தகுதி மற்றும் கேப்டன்சி என அனைத்தையுமே பாகிஸ்தான் அணி பின்தங்கி உள்ளது. பாகிஸ்தான் அணியின் உத்வேகமும் மந்தமாக தான் இருக்கின்றது. இப்படி ஒரு சூழலில் இருந்து அவர்கள் எவ்வாறு முன்னேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று யாசர் அராஃபத் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் டி20 உலக கோப்பை பயிற்சி குறித்து பேசிய அந்த அணி கேப்டன் பாபர் அசாம், தாங்கள் நல்ல முறையில் இந்த தொடருக்காக தயாராக இருக்கின்றோம். நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பாபர் அசாம் கூறியிருக்கிறார். வரும் டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒன்பதாம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.