மும்பை : இந்திய அணியில் எனக்கு ஏன் போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு வழங்காமல் மாற்று வீரராக வைத்து இருக்கிறீர்கள் என சூசகமாக கேட்ட வீரரை கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கட்டம் கட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரு நாட்களாக பேசு பொருளாக ஆகி இருக்கும் இஷான் கிஷன் தான் அந்த வீரர்.
தற்போது அவர் இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடருக்கான அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது அணியில் இடம் பெறவில்லை. இதன் பின்னணியில் தான் அவரை குறி வைத்து ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் வாய்ப்பு பெற்று வந்த இஷான் கிஷன் தற்போது தனக்கு தானே சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறித்த கேள்விக்கு பூடகமாக ஒரு பதிலை கூறி இருப்பதும் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இஷான் கிஷன் கடந்த ஓராண்டாக அணியில் மாற்று வீரராக இடம் பெற்று வந்தார். மற்ற வீரர்கள் ஓய்வில் இருக்கும் போதும், காயத்தில் இருக்கும் போதும் மட்டுமே இஷான் கிஷனுக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அவர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனக்கு டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காது என தெரிந்த உடன் தான் மன சோர்வின் காரணமாக விலகுவதாக கூறி அணியில் இருந்து தாமாக விலகினார்.

இந்த விவகாரத்தில் என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பது முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இஷான் கிஷன் தனக்கு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த நிலையில் விலகியது, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவை எதிர்த்து அவர் நடந்து கொண்டதாக எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
ஒரு வீரர் கேப்டன் எடுக்கும் முடிவை எதிர்த்து நடந்து கொண்டால் அவர் அணியில் நீடிப்பது கடினம். அதிலும் இஷான் கிஷன் தாமாக அணியில் இருந்து விலகியும் இருக்கிறார். இந்த நிலையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பயிற்சியாளர் டிராவிட்டிடம், இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? அதனால் தான் அவர் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம் பெறவில்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டிராவிட், "இஷான் கிஷன் இன்னும் தான் அணியில் ஆட தயார் என கூறவில்லை. அவராக ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவர் மீண்டும் போட்டிகளில் ஆட தயாராகும் போது அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடி தான் அணியில் ஆட தயாராக இருப்பதை உறுதி செய்வார். வெளியில் செல்வது உங்கள் முடிவு. அணிக்குள் வருவது எங்கள் முடிவு" என கூறினார். அந்த கடைசி வரிகள் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதன் அர்த்தம், இஷான் கிஷனின் திறமையை மதித்தே அவரை அணியில் தொடர்ந்து தேர்வு செய்து வந்தோம். அவர் அதை வேண்டாம் என மறுத்து வெளியேறினால் அது அவர் விருப்பம். ஆனால், அவர் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் நாங்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்பதே. அணியின் உள்விவகாரமான இதை டிராவிட் வெளிப்படையாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராகுல் டிராவிட் பேசி இரு நாட்கள் ஆன நிலையில் இஷான் கிஷன் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. அடுத்து அவர் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா? என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன அவருக்கு போட்டியாக டி20 அணியில் ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் அணியில் கே எஸ் பாரத் மற்றும் புதுமுகமான துருவ் ஜுரேல் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர்.