நியூயார்க் : 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டார். முன்னதாக உசைன் போல்ட், கிறிஸ் கெயில் ஆகியோர் தூதர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது தூதராக உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
2024 டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 36 நாட்களில் துவங்க உள்ளது. இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

அதனை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெஸ்ட் இண்டீஸ் குழும நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப் பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட்டை தூதராக அறிவித்தது. அவர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானவர் என்பதால் அவரை அறிவித்து இருந்தது.
அடுத்ததாக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் மற்றொரு தூதராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட இந்தியாவின் சார்பில் யுவராஜ் சிங் தூதராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
முதன் முதலில் 2007இல் டி20 உலகக்கோப்பை நடந்த போது யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து கிரிக்கெட் உலகை வியந்து பார்க்க வைத்தார். டி20 உலகக்கோப்பை அதன் முதல் தொடரிலேயே பெரிய வெற்றி பெற யுவராஜ் சிங் முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வகையில் அவர் டி20 உலகக்கோப்பை அமெரிக்காவை மையப்படுத்தி நகரும் நிலையில் அதில் தூதராக இடம் பெற்று இருக்கிறார்.
இது குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், "டி20 உலகக்கோப்பை ஆடியதில் இருந்து எனக்கு சில சிறந்த நினைவுகள் கிடைத்தன. ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது ஆகியவையும் அதில் அடங்கும். இந்த உலகக்கோப்பை தொடரின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் இது மிகவும் பெரிது." என்றார்.
மேலும், "நியூயார்க்கில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இந்த ஆண்டின் மிகப் பெரிய போட்டியாக இருக்கும். இந்த தொடரின் ஒரு பகுதியாக இருந்து உலகின் சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் பங்கேற்பதை காண்பது எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன்" என யுவராஜ் சிங் கூறி இருக்கிறார்.