மும்பை: டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தங்களது பயணத்தை அமெரிக்காவுக்கு எதிராக மும்பையில் தொடங்க உள்ளது. இத்தொடரில் களமிறங்கும் இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவை, உலகின் மிக ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் புகழ்ந்துள்ளார்.
நடப்பு சாம்பியனான இந்தியா, இம்முறை கோப்பையை வெல்ல மிக வலுவான வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் சிறந்த கலவையுடன் இந்திய அணி களமிறங்குகிறது. கடந்த டி20 உலககோப்பையில் முக்கிய பங்காற்றிய பண்ட், இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இடது கை தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா, 2024ல் சர்வதேச அரங்கில் அறிமுகமானதிலிருந்து அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 38 போட்டிகளில் 195 ஸ்ட்ரைக் ரேட்டுடன் சுமார் 1300 ரன்களை குவித்துள்ளார். அவரது புள்ளிவிவரங்கள் பெரும் தாக்கத்தை களத்தில் ஏற்படுத்துகிறது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய "தற்போதைய ஃபார்மின்படி, அபிஷேக் சர்மா தான் மிகுந்த ஆபத்தானவர். அவர் அபாரமாக ஆடி, ஐபிஎல் உச்சத்தில் இருந்தார். இது அவரது செயல்முறை சரியானது, தன்னம்பிக்கை காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டத்தால் மட்டுமே சிறப்பாக இருக்க முடியாது" என்றார்.
தனது கிரிக்கெட் வாழ்வில் ராகுல் டிராவிட் ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேசிய ரிஷப் பந்த், "ஒன்றைப்பற்றி அதிகம் சிந்திக்காமல், அதிலேயே மூழ்கிவிடாமல் இருப்பதே முக்கியம். ராகுல் பாயிடம் இருந்து ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொண்டேன். ரிஷப், சதம் அடித்தாலும், பூஜ்ஜியம் அடித்தாலும், நீ ஒரே மாதிரியாக இருக்க முயற்சி செய் என்று அவர் எப்போதும் கூறுவார்," என்றார்.
"ஒரு வீரராக, நீங்கள் யார் என்பதை தொடர்வது மிகக் கடினமான காரியம். உணர்ச்சிகள் சில சமயங்களில் நம்மை வென்றுவிடும், ஆனால் டிராவிட் அறிவுரை எப்போதும் எனக்கு வழிகாட்டும்" என்று அவர் கூறினார்."தனிப்பட்ட முறையில், நான் அதைப் பின்பற்றுகிறேன். சதம் அடித்தாலும் அல்லது பூஜ்ஜியம் அடித்தாலும், நான் ஒரே நபராக இருக்கவே விரும்புகிறேன். ஆட்டமிழக்கும்போது, அது என்னை அதிகம் காயப்படுத்துகிறது. ரன்கள் எடுப்பதை விட, ஆட்டமிழக்கும் வலியையே நான் தீவிரமாக உணர்கிறேன்" என ரிஷப் பந்த் கூறினார்.