மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் முக்கிய வீரர்களில் ஒருவராக இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். 25 வயதான இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக், இத்தொடரில் அதிக ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை வெல்லக்கூடும் என்றும் பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமரான பாண்டிங், அபிஷேக்கின் சர்வதேசப் போட்டி அனுபவமின்மை அவருக்கு சாதகமாக அமையும் என்றார். ஐசிசிக்கு அளித்த பேட்டியில், "அபிஷேக் ஒரு நட்சத்திர வீரர். அவருடைய அனுபவமின்மை நிச்சயமாக சாதகமான அம்சம். அவர் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் ஆக முடியும்," என்று பாண்டிங் குறிப்பிட்டார்.

“அதுதான் அவர் எவ்வளவு சிறந்தவர் என காட்டும் என நான் நினைக்கிறேன். அவர் சிறப்பாக விளையாடினால், இந்தியாவை வெல்வது மிகக் கடினம், இல்லையெனில், இந்தியாவும் பாதிக்கப்படும்.. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அவர் மிக முக்கியமானவர்,” என பாண்டிங் வலியுறுத்தினார். உலக அரங்கில் விளையாட அபிஷேக் தயங்கமாட்டார் என்றும் அவர் கூறினார்.
அபிஷேக் IPL-லில் அறிமுகமானபோது தான் அளித்த பயிற்சி குறித்து பாண்டிங் நினைவு கூர்ந்தார். "நான் தான் அவரது முதல் பயிற்சியாளர். அவர் 17 வயதில் டெல்லி அணிக்காக அறிமுகமாகி உடனடி தாக்கத்தை ஏற்படுத்தினார்," என்றார்.
"முதல் பந்திலேயே பவுலரின் தலைக்கு மேல் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்து ஒரு கிளாசிக் போஸ் கொடுத்தார். 17 வயதில் அவரிடம் தனித்தன்மை இருப்பது தெரிந்தது,” என பாண்டிங் அப்போதைய அனுபவத்தை விவரித்தார்.
"அவரை டிரேட் செய்ய வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினேன். ஒரு சூப்பர் ஸ்டார் உருவாகிறார், தக்கவைக்க வேண்டும். அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
பிப்ரவரி 7 அன்று தனது முதல் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் அபிஷேக் சர்மா, 2018 உலகக் கோப்பை வென்ற இந்திய U19 அணியில் இடம்பெற்றவர். இத்தொடருக்கு முன், நியூசிலாந்திற்கு எதிரான டி20ஐ தொடரில் 4 போட்டிகளில் 152 ரன்கள் எடுத்து, மூன்றாவது போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அவர் சிறப்பான பார்மில் இருந்தார்.
இது இந்தியரொருவர் அடித்த இரண்டாவது அதிவேக டி20ஐ அரை சதமாகும். இதற்கு முன், 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.அடுத்தடுத்து இரண்டு ஆடவர் டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைக்க அபிஷேக் சர்மா ஒரு முக்கிய வீரராக கருதப்படுகிறார். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா மற்றும் நெதர்லாந்துடன் குரூப் ஏ பிரிவில் உள்ளது.