லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசத்தை விலக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை சேர்த்த ஐசிசி முடிவை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கடுமையாக விமர்சித்துள்ளார். போட்டி நடைபெறும் நாடான இந்தியாவில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம்.
உலக தரவரிசையில் அடுத்த சிறந்த அணியான ஸ்காட்லாந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் வீரர்களின் பாதுகாப்பு குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் கவலை தெரிவித்திருந்தது. கொல்கத்தாவில் மூன்று டி20 போட்டிகளும், மும்பையில் ஒரு போட்டியும் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.

ஐபிஎல் 2026 தொடரில் இருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை நீக்க பிசிசிஐ உத்தரவிட்ட பின்னரே, இந்த பாதுகாப்பு அச்சங்கள் எழுந்தன. ரஹ்மானின் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஐசிசி, வங்கதேசத்தின் பாதுகாப்பு கவலைகளை நிராகரித்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு வர மறுத்த இந்தியாவுக்கு துபாயில் விளையாட சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஐசிசி ஏற்பாடு செய்தது. ஐசிசியின் இந்த 'இரட்டை நிலைப்பாட்டை' ஷாஹித் அப்ரிடி கேள்வி எழுப்பினார்.
தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட அப்ரிடி, "வங்கதேசத்திலும், ஐசிசி நிகழ்வுகளிலும் விளையாடிய ஒரு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரனாக, ஐசிசியின் முரண்பாட்டால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். 2025-ல் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்யாத இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை அது ஏற்றுக்கொண்டது.
ஆனால் வங்கதேசத்திற்கு மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு. வங்கதேச வீரர்களும், அதன் கோடிக்கணக்கான ரசிகர்களும் மதிப்பிற்குரியவர்கள். இரட்டை நிலைப்பாடுகளுக்கு அல்ல. ஐசிசி பாலங்களைக் கட்ட வேண்டும், அவர்களை எரிக்கக் கூடாது."என்று தெரிவித்தார்.