மும்பை: 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இதே மைதானத்தில் நடத்தப்பட்டு இந்திய அணி தோல்வி அடைந்தது.
2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே பிசிசிஐ தொடங்கிவிட்ட நிலையில், டிசம்பர் மாதம் முடிவதற்குள் மைதானங்கள் முழுமையாக தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச அட்டவணை ஐசிசியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. அதேபோல் இம்முறை 2023 உலகக்கோப்பையை போல் அல்லாமல், குறைந்த அளவிலான மைதானங்களிலேயே போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.
இதற்காக 5 மைதானங்களை குறித்து வைத்திருக்கிறது. அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பையை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் இலங்கையிலும் 3 மைதானங்களில் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மைதானத்தில் 6 போட்டியை நடத்த பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.
அதேபோல் லக்னோ மற்றும் பெங்களூர் நகரங்களில் டி20 உலகக்கோப்பையை நடத்தலாமா என்பதை முடிவு செய்யவில்லை. அதேபோல் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்ட நவி மும்பை, விசாகப்பட்டிணம், இந்தூர் மற்றும் கவுகாத்தி ஆகிய மைதானங்களில் பயிற்சி போட்டிகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டதை போல் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றால், அரையிறுதி போட்டிகள் கொழும்பு மைதானத்தில் நடக்கும். இதற்கு பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளும் இலங்கையில் நடக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணிக்க போவதில்லை.
இதனால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றால், கொழும்புவில் தான் இறுதிப்போட்டி நடக்கும். ஒருவேளை பாகிஸ்தான் அணி தகுதி பெறவில்லை என்றால், இறுதிப்போட்டியை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடத்தப்பட்டு இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.