சென்னை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மீண்டும் சரிவை சந்தித்தால், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை முன்கூட்டியே களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சீராக இல்லை. ஆட்டத்தின் நடுவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய பேட்டர்கள் தடுமாறி வருகின்றனர். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது, இந்திய அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அப்போது நெருக்கடியை சமாளிக்க வாஷிங்டன் சுந்தர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். ஆனால் இந்த திட்டம் பலனளிக்கவில்லை. அவர் 11 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவர் ஆட்டமிழந்த போது இந்திய அணி 7.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் என மிக மோசமான நிலையில் இருந்தது. இறுதியில் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியையும் தழுவியது.

இது குறித்து கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசிய அனில் கும்ப்ளே, "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்டதை போன்ற ஒரு மோசமான நிலை மீண்டும் உருவானால், மாற்று வீரரை களமிறக்கி பரிசோதனை செய்வதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை அந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும்.
அந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையை சிறப்பாக கையாண்டு, ஆட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் திறன் ஹர்திக் பாண்டியாவுக்கு முழுமையாக உள்ளது. ஜிம்பாப்வே அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இது போன்ற நிலை ஏற்பட்டால், இந்திய அணி இந்த ஆலோசனையை கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

அனில் கும்ப்ளே கூறுவது போலவே, 4வது மற்றும் 5வது இடங்களில் களமிறங்கி விளையாடியதில் ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த புள்ளிவிவரங்களை வைத்துள்ளார். 4வது இடத்தில் விளையாடிய 6 போட்டிகளில் அவர் 131 ரன்களை குவித்துள்ளார். இதில் அவரது சராசரி 43.66 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 238.18 ஆகவும் உள்ளது. அதேபோல 5வது இடத்தில் களமிறங்கி விளையாடியதில் ஹர்திக் பாண்டியா 1208 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவரது சராசரி 30க்கும் மேலாகவும், ஸ்ட்ரைக் ரேட் 154.47 ஆகவும் உள்ளது.
மேலும், இந்திய அணி இந்த தொடரில் இதுவரை தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தவில்லை என்றும் அனில் கும்ப்ளே சுட்டிக்காட்டினார். "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர்களின் 3 விக்கெட்டுகளை வெறும் 20 ரன்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். அந்த தருணத்தில் எதிரணியை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் இந்திய அணி வியூக ரீதியாக சற்று பின்தங்கி, தென்னாப்பிரிக்க அணியை தப்பவிட்டது" என்று விமர்சித்தார்.

தற்போது டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியான நிலையில்உள்ளது இந்திய அணி. தனது அடுத்த சூப்பர் 8 போட்டியில் பிப்ரவரி 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.