மும்பை: டி20 உலககோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக பயிற்சி ஆட்டங்களை ஐசிசி நடத்த உள்ளது. இதில் இந்திய அணி, வரும் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் தான் பங்கேற்கிறது. இங்கிலாந்து அணி, பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு பதில், இலங்கைக்கு எதிராக 3 டி20 போட்டியில் விளையாடுகின்றனர்.
இந்த நிலையில், மற்ற அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக இந்திய அணி, தங்களுடைய இளம் படையை களமிறக்கி, பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதற்கான அணியில் 2 ஐபிஎல் ஸ்டார்கள் விளையாட உள்ளனர். டெல்லி கிரிக்கெட் அணி கேப்டன் ஆயுஷ் படோனி மற்றும் பேட்டர் ப்ரியன்ஷ் ஆர்யா இந்த இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக மும்பைக்கு எதிரான ரஞ்சி டிராபி 2025-26 போட்டியில் இருவரும் பங்கேற்க மாட்டார்கள். வியாழக்கிழமை MCA-BKC மைதானத்தில் தொடங்கவுள்ள இப்போட்டிக்கு, ஆயுஷ் படோனிக்குப் பதிலாக ஆயுஷ் டோஸேஜா டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நியூசிலாந்துடன் நடந்த மூன்று ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் ஆயுஷ் படோனி முதன்முறையாக இடம்பெற்றார். டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களுக்காகவே படோனி மற்றும் ஆர்யா இருவரும் இந்தியா 'ஏ' அணியில் இணைந்துள்ளனர்.
இந்தியா 'ஏ' அணியானது பிப்ரவரி 2 அன்று நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் அமெரிக்காவுடன் மோதவுள்ளது. அதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் நமீபியாவுக்கு எதிராக ஒரு பயிற்சிப் போட்டி நடைபெறும். எனினும் மற்ற வீரர்கள் தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ இன்னும் வெளியிட வில்லை. காயமடைந்த திலக் வர்மா, அக்சர் பட்டேல், வாசிங்டன் சுந்தர் இந்த பயிற்சி போட்டியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆயுஷ் டோஸேஜா தலைமையிலான டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் : சனத் சங்வான், வைபவ் கந்த்பால், சுமித் மாத்தூர், பிரணவ் ராஜ்வன்ஷி, சித்தார்த் சர்மா, துருவ் கவுசிக், ராகுல் டாகர், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), திவிஜ் மெஹ்ரா, ஆர்யன் ராணா, மணி க்ரேவால், ரோஹன் ராணா, ராகுல் சௌத்ரி.