கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு நிறைவேறுமா அல்லது அந்த அணி தொடரை விட்டு வெளியேறுமா என்பது, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியின் முடிவில் தான் உள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றில் இதுவரை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதனால் அரையிறுதிக்குச் செல்ல மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை நடைபெறும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிக முக்கியமானதாகும்.

தற்போதைய நிலையில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளதுடன், அரையிறுதிக்கும் தகுதி பெற்றுவிட்டது. நியூசிலாந்து அணி 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், அந்த அணியின் புள்ளி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துவிடும். பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி (இலங்கைக்கு எதிராக) மட்டுமே மீதமுள்ளது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 3 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். எனவே, நியூசிலாந்து வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி எந்தவித வாய்ப்புமின்றி தொடரை விட்டு வெளியேறிவிடும்.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். அப்படி நடந்தால் நியூசிலாந்து அணி 3 புள்ளிகளுடனேயே இருக்கும். அதன்பிறகு சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தினால், பாகிஸ்தான் அணியும் 3 புள்ளிகளைப் பெறும்.
இரு அணிகளும் 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் தான் அரையிறுதிக்குச் செல்லும் அணி தீர்மானிக்கப்படும். இங்குதான் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சிக்கல் உள்ளது. நியூசிலாந்து அணி +3.050 என்ற மிகச் சிறந்த ரன் ரேட்டை வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி -0.461 என்ற மைனஸ் ரன் ரேட்டில் உள்ளது.
எனவே, இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்துவது மட்டும் போதாது; மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதேபோல, இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியும் இமாலய வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நியூசிலாந்தின் ரன் ரேட்டை முந்தி பாகிஸ்தானால் அரையிறுதிக்குச் செல்ல முடியும்.

ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டாலும், இங்கிலாந்து அணி இந்தப் போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளாது. ஏனெனில், குரூப் சுற்றில் முதலிடம் பிடித்தால், அரையிறுதியில் இதுவரை தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்க அணியைச் சந்திப்பதைத் தவிர்க்கலாம். எனவே இங்கிலாந்து அணி வெற்றிக்காகத் தீவிரமாகப் போராடும் என்பது பாகிஸ்தான் அணிக்குச் சற்று ஆறுதலான விஷயமாகும். ஒருவேளை நியூசிலாந்து அணி வென்றாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை முந்துமா? என்ற கேள்வியும் உள்ளது.
