கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று சிக்கலாகியுள்ளது. தற்போது குரூப் 2 புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு புள்ளியுடன் உள்ளது.
பல்லேகலேயில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்ந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் 51 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பின்னர் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து தடுமாறிய போது களமிறங்கிய ஹாரி ப்ரூக், பொறுப்புடன் விளையாடி டி20 சர்வதேச போட்டிகளில் தனது சிறந்த ஆட்டத்தைப் பதிவு செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் குரூப் 2 பிரிவில் இரண்டு போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து அணி, முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி தொடர்ந்து 5வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து - 4 புள்ளிகள் (நிகர ரன் ரேட் +1.491)
நியூசிலாந்து - 1 புள்ளி (நிகர ரன் ரேட் 0)
பாகிஸ்தான் - 1 புள்ளி (நிகர ரன் ரேட் -0.461)
இலங்கை - 0 புள்ளி (நிகர ரன் ரேட் -2.550)
பிப்ரவரி 25: நியூசிலாந்து vs இலங்கை
பிப்ரவரி 27: நியூசிலாந்து vs இங்கிலாந்து
பிப்ரவரி 28: பாகிஸ்தான் vs இலங்கை
பாகிஸ்தான் அணி தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் பிப்ரவரி 28ஆம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு தகுதி பெற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் பாகிஸ்தானின் புள்ளி எண்ணிக்கை மூன்றாக உயரும். இருப்பினும், அது மட்டுமே அரையிறுதியை உறுதி செய்யாது. மற்ற அணிகளின் போட்டி முடிவுகளும் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைய வேண்டும்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தும், மற்றொரு போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையும் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு நடந்தால், புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் 3 புள்ளிகளுடனும், இலங்கை 2 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 1 புள்ளிகளுடனும் இருக்கும். இதனால் குரூப் 2ல் இருந்து இரண்டாவது அணியாக பாகிஸ்தான் சுலபமாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
நியூசிலாந்து அணி தங்களுக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, மற்றொன்றில் தோல்வியடைந்தால், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். (பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியிருக்க வேண்டும்). இந்த சூழ்நிலையில் எந்த அணியின் நிகர ரன் ரேட் அதிகமாக உள்ளதோ, அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
ஒருவேளை இலங்கைக்கு எதிரான தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால், எந்தவித வாய்ப்புமின்றி தொடரை விட்டு வெளியேறிவிடும்.
மழையால் போட்டிகள் ரத்தானால் என்ன நடக்கும்? பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான போட்டி மழையால் ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் பாகிஸ்தான் 2 புள்ளிகளைப் பெறும். அதேபோல, இலங்கை மற்றும் நியூசிலாந்து போட்டியும் மழையால் ரத்தாகி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இந்த நிலையிலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் சிறந்த அணி எதுவோ அதுவே இங்கிலாந்துடன் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

எனவே, பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியிலும், அதேசமயம் பிற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையிலும் உள்ளது.