மும்பை: இன்னும் சில வாரங்களில் 2026 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கவுள்ளது. சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க இந்திய அணி தயாராகி வரும் நிலையில், அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "எல்லாம் ஓகே.. ஆனா அந்த கடைசி சில ஓவர்கள் தான் பயமா இருக்கு" என்று அவர் சுட்டிக்காட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய மண்ணில் நடைபெறவுள்ளது. நடப்புச் சாம்பியனான இந்திய அணி, பிப்ரவரி 7-ம் தேதி மும்பையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியுடன் தனது பயணத்தைத் தொடங்குகிறது.

2024 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருகிறது. குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்கள் அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். வருண் சக்கரவர்த்தி 27 போட்டிகளில் 53 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி வருகிறார். வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 20 போட்டிகளில் 31 விக்கெட் வீழ்த்தி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய அணியின் சமீபத்திய ஃபார்ம் குறித்து ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக், "இந்திய அணி தற்போது மிக வலுவான நிலையில் உள்ளது. உலகக்கோப்பைக்குப் பிறகு ஆடிய 36 போட்டிகளில் 29-ல் வெற்றி பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல. டி20 போன்ற கணிக்க முடியாத ஆட்டத்தில் இந்தத் தொடர் வெற்றி பிரமிக்க வைக்கிறது. ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை மூன்று முறை வீழ்த்தியதும் இதில் அடங்கும்" என்று பாராட்டினார்.
என்னதான் வெற்றிகளைக் குவித்தாலும், இந்திய அணியின் 'டெத் பௌலிங்' (Death Bowling) எனப்படும் கடைசி கட்ட பந்துவீச்சு கவலையளிப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அணியின் காம்பினேஷன் சற்று சவாலாக உள்ளது. ஆசிய மைதானங்களில் இந்தியா பெரும்பாலும் சுழற்பந்து வீச்சாளர்களைத் தான் நம்பியுள்ளது. வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர்."
"மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிவம் துபேவை நம்பியிருக்கிறோம். ஒருவேளை ஆட்டம் கடைசி வரை இழுத்துச் செல்லப்பட்டாலோ அல்லது பனிப்பொழிவு காரணமாக பந்து சுழலவில்லை என்றாலோ, கடைசி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது இந்தியாவுக்குக் கடினமாக மாறலாம். இதுதான் எனக்குத் தெரியும் ஒரே பலவீனம்" என்று தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மூன்று சிறிய அணிகள் உள்ளன. என்னதான் சிறிய அணிகள் என்றாலும், டி20 கிரிக்கெட்டில் ஒரு மோசமான ஓவர் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும் என்பதால், இந்தியா தனது வேகப்பந்து வீச்சு பலவீனத்தைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.