மும்பை: ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை 2026 லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இளம் வீரர் டாம் பேண்டனின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்து நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை 18.2 ஓவர்களில் எட்டி, எளிதாக வெற்றியைப் பெற்றது.
நான்காவது வீரராக களமிறங்கிய டாம் பேண்டன் 41 பந்துகளில் 63 ரன்கள் குவித்து, தனது முதல் டி20 உலகக்கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார். அவரது சிறப்பான ஆட்டம், இங்கிலாந்து அணிக்கு வெற்றியைக் கொண்டு வந்தது. இது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பையில் ஒரு ஐரோப்பிய அணிக்கு எதிராக இங்கிலாந்து பெறும் முதல் வெற்றி ஆகும். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 19 ஆண்டுகளாக தொடர்ந்த சாபம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த வெற்றி மூலம் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும் இங்கிலாந்தின் வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, வரும் திங்கள்கிழமை அன்று கொல்கத்தாவில் இத்தாலியை சந்திக்கும். தனது நான்காவது குரூப் சி போட்டியில் உறுதியான வெற்றியைப் பெறும் பட்சத்தில், சூப்பர் 8 சுற்றுக்கு எளிதாக முன்னேறிவிடும்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு டாம் பேண்டன் 63 ரன்கள் மிகப்பெரிய காரணமாக அமைந்தது. ஜேக்கப் பெத்தேல் 28 பந்துகளில் 32 ரன்களும், சாம் கர்ரன் 20 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இங்கிலாந்து அணி தனது தொடக்க வீரர்களை வெறும் 13 ரன்களுக்குள் இழந்தபோதும், பேண்டனும் பெத்தேலும் மூன்றாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பினர்.
இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், ஸ்காட்லாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும், அவர் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக நான்காவது வீரர் ஆனதுடன், அதிவேகமாக 4000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கிக் கொண்டார்.
முன்னதாக, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாவ்சன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்சே 4 ரன்கள் மற்றும் பிராண்டன் மெக்முல்லன் டக் அவுட்டாகி மூன்று ஓவர்களுக்குள்ளேயே வெளியேறினர். மைக்கேல் ஜோன்ஸும் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆறாவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு, கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 49 ரன்கள் மற்றும் டாம் புரூஸ் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து, நான்காவது விக்கெட்டுக்கு 41 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து அணியை இந்த ஜோடி வலுவான நிலைக்குக் கொண்டு சென்றது. ஆனால், 14வது ஓவரில் புரூஸ் வெளியேறிய பின், ஸ்காட்லாந்து அணி கடும் சரிவை சந்தித்தது. கடைசி 7 பேட்டர்கள் வெறும் 39 ரன்கள் மட்டுமே சேர்த்து, அணியின் மொத்த ஸ்கோரை 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.